Published : 17 Jan 2017 10:47 AM
Last Updated : 17 Jan 2017 10:47 AM

ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்க்கு மீண்டும் வந்தது கிருஷ்ணா நீர்: கண்டலேறு அணையில் இருந்து 1,700 கனஅடி திறப்பு

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட கிருஷ்ணா நீர் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்க்கு நேற்று வந்தடைந்தது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இதையடுத்து, கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2 மாதங்களுக்கு முன் ஆந்திர அரசுக்கு கடிதம் எழுதினர்.

இதை ஏற்று கடந்த நவம்பர் 21-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் 11-ம் தேதி நிறுத்தப்பட்டது. இதன் மூலம் 0.99 டிஎம்சி தண்ணீர் பூண்டி ஏரிக்கு வந்து சேர்ந்தது. அதன்பின் மீண்டும் தண்ணீர் திறந்துவிடும்படி பொதுப் பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதலில் விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த வாரம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்தித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று நேற்று முன்தினம் கூடுதலாக 520 கனஅடி தண்ணீர் பூண்டிக்கு திறந்து விடப்பட்டது. தற்போது மொத்தம் விநாடிக்கு 1,700 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட்க்கு நேற்று இரவு வந்து சேர்ந்தது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x