Published : 01 Jun 2017 08:40 AM
Last Updated : 01 Jun 2017 08:40 AM

சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்கு அதிகாரிகள்தான் மூல காரணம்; வழக்கு தொடருவேன்: டிராபிக் ராமசாமி

தியாகராயநகர் சென்னை சில்க்ஸ் தீ விபத்து சம்பவத்துக்கு அதிகாரிகள் தான் மூல காரணம் என குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள விதிமீறல் கட்டிடங்களை கடந்த 1999, 2001, 2002 மற்றும் 2003 ஆகிய கால கட்டங் களில் தமிழக அரசு மறுவரையறை செய்தது. ஆனால் இதை உயர் நீதி மன்றம் கடந்த 2006-ல் ரத்து செய் தது. அப்போது முதல் இப்போது வரை இந்தப் பிரச்சினை தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

உயர் நீதிமன்றம் கண்டனம்

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிஎம்டிஏ கண்காணிப்பு கமிட்டி உறுப்பினரான ஏ.ஜி.தேவசகாயம் கடந்த ஆண்டு தாக்கல் செய்த ஒரு மனுவை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், ‘‘மறுவரையறை தொடர்பாக உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தால் அதை சீர்குலைக்கும் விதமாகவே அதிகாரிகள் செயல்படுகின்றனர். தமிழக அரசும் எந்த கொள்கை முடிவையும் எடுப்பதில்லை. தீ தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாத எந்த கட்டிடங்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை. வருமுன் காப்பதற்கு எந்த ஆயத்தமும் மேற்கொள்ளாமல் மாநகராட்சியும், சிஎம்டிஏ-வும் பொறுப்பை தட்டிக் கழிக்கின்றன.

இதனால் விதிமீறும் ஆக்கிரமிப் பாளர்களுக்கும் சட்டம் குறித்த எந்த பயமும் கிடையாது. துணிச்சலாக விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர். சென்னையில் மட்டுமே 65 ஆயிரத்து 529 விண்ணப்பங்கள் சட்டவிரோத கட்டிடங்களை வரைமுறை செய்வது தொடர்பாக பெறப்பட்டுள்ளது என்றால் இதி லிருந்தே இந்தப் பிரச்சனையின் ஆழமும், சட்டவிரோதமும் தெளிவா கிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்’’ என்று அப்போதே கடுமையாக சாடியிருந்தனர்.

இதேபோல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் சென்னை ஜார்ஜ் டவுன், சவுகார்பேட்டை, தி.நகர் மற்றும் அடையாறு உள்ளிட்ட நெரிசலான பகுதிகளில் உள்ள சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் பல பொது நல மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அந்தமனுக்களும் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்து வருகின்றன.

விதிமீறல் தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டே இருந்தாலும் அவை காற்றில் பறக்க விடப்படும் வெற்றுக் காகிதங் களாகவே இருந்து வருகின்றன என்பதற்கு அவ்வப்போது அரங் கேறும் சம்பவங்களே சாட்சியம்.

அதிகாரிகளின் அலட்சியம்

இதுதொடர்பாக டிராபிக் ராமசாமி கூறியதாவது: சென்னை யில் கட்டிட விதிமீறல்கள் தொடர் பாக நான் தொடர்ந்த வழக்குகளில் 8-க்கும் மேற்பட்டவை நிலுவையில் உள்ளன. சென்னையில் உள்ள ஆயிரக்கணக்கான சட்டவிரோத அடுக்குமாடி கட்டிடங்களுக்கு வீட்டு வசதித்துறையின் முதன்மைச் செயலர்தான் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளார்.

தற்போது தீ விபத்து நடந்துள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்திற்கு கார் பார்க்கிங் தனியாக பின்புறம் உள்ளது. விதிகள் 113(ஏ)-ன் படி அரசு, அந்த கட்டிடத்திற்கு அளித்துள்ள விதிவிலக்குகள் எதுவுமே செல்லாது. காரணம் அந்த விதிவிலக்குகளை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டதிருத் தமும் இதுவரை கொண்டுவரப் படவில்லை. இது தொடர்பாக ஏற்கெனவே நீதிபதி மோகன் கமிட்டியும், நீதிபதி ராஜேஸ்வரன் கமிட்டியும் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து பல ஆண்டு களாகி விட்டது. இதில் எதையுமே அரசு பின்பற்றவில்லை. எப்எஸ்ஐ விதிமுறைப்படி தற்போது சென்னை சில்க்ஸ் உள்ள இடத்தில் 7 மாடி கட்டிடங்களை கட்டவே முடியாது. அந்த கட்டிடத்தில் எந்த தீ தடுப்பு வசதியும் இல்லை.

இதன்மூலம் சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உயர் நீதிமன்ற உத்தரவுகளை அப்பட்டமாக மீறியுள்ளனர். சமீபத்தில் வடபழனியில் 4 பேர் தீயில் கருகி இறந்தனர். ஏற்கெனவே தி.நகரில் பல தீ விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. அதிகாரிகளின் அலட்சியத்தால் சென்னையில் மட்டுமே இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி இறந்துள்ளனர். சென்னை சில்க்ஸ் தீ விபத்து சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x