Published : 27 Apr 2017 09:14 AM
Last Updated : 27 Apr 2017 09:14 AM

குஷ்பு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி

அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம் செய்தார். ஆண்டிபட்டியில் பிரச்சாரத்தின்போது தேர்தல் நடத்தை விதியை மீறியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற கிளையில் குஷ்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள குஷ்புவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க தடை விதித்தது.

இந்நிலையில், தற்போது காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருக்கும் குஷ்பு, தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் மனு அளித்தார். ஆண்டிப்பட்டி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள அவர் மீதான குற்ற வழக்கை காரணம் காட்டி, அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்தனர்.

இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் குஷ்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் குஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்கவும், அவர் வெளிநாடு செல்வதாக இருந்தால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து கோடை விடுமுறைக்காக குடும்பத்துடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டிருப்பதால், அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் குஷ்பு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அவர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.ரவி வாதிட்டார். விசாரணைக்குப் பின் ஏப்.28 முதல் மே 14-ம் தேதி வரை ஸ்பெயின் நாட்டுக்குச் செல்ல குஷ்புவுக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

ஆண்டிப்பட்டி நீதித்துறை நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ள குஷ்பு மீதான குற்ற வழக்கை காரணம் காட்டி, அவரது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அதிகாரிகள் மறுத்தனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x