Published : 20 Nov 2013 01:31 PM
Last Updated : 20 Nov 2013 01:31 PM

மீனவர்களை கடல் பழங்குடியினர் பிரிவில் சேர்த்திடுக: வைகோ

மீனவர்களை, கடல் பழங்குடியினராக அறிவித்து, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அரசின் அனைத்து விதமான திட்டங்கள் கிடைத்து வாழ்க்கையில் தன்னிறைவு அடைந்திட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு மதிமுக பொதுச் செய்லர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

நவம்பர் 21 - உலக மீனவர் தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, அவர் இன்று வெளியிட்ட செய்தியில், "மீனவர்கள் கடலில் தங்களுக்கு ஏற்படும் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, 40 நாட்டு மீனவப் பிரதிநிதிகள் 21.11.1997 டில்லியில் கூடி விவாதித்து, உலக அளவில் இணைந்து மீனவர் உரிமைக்குக் குரல் கொடுத்துப் போராட, மீன் பிடித் தொழிலாளர்கள் பேரவை' என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.

அதன் மூலம் மீனவர்களுக்கு எதிராக அரசுகள் கொண்டு வரும் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்தல் மற்றும் பாரம்பரிய மீனவர்கள், கடல் மாசு அடைந்து சுற்றுச்சூழல் பாதிப்பால் மீன் வளம் குன்றி மீன்பிடித் தொழில் அழிவுப்பாதையில் செல்வது உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடிவு எடுக்கப்பட்ட நாளே, நவம்பர் 21 'உலக மீனவர்கள் தினமாக' அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் வாழும் நெய்தல் நில மீனவ மக்களின் வாழ்க்கை, கரையில் நிம்மதியைத் தொலைத்துவிட்டு, சொந்தங்களைக் கரை சேர்க்க நாள்தோறும் கொந்தளிக்கும் கடலில் போராடி வரும் மீனவர்கள், மீன்பிடி தடைகாலம், மழை, புயல், இயற்கைப் பேரிடர், கடற்பஞ்சம், பண்டிகை, திருவிழாக் காலங்கள் என்று போக மீதம், ஓராண்டில் 100 நாட்கள் மட்டுமே மீன்பிடித் தொழில் செய்கிறார்கள்.

கடந்த பத்து ஆண்டுக் கால மக்கள் விரோத காங்கிரஸ் மத்திய அரசின் ஆட்சி என்பது, பன்னாட்டு முதலாளிகளுக்கும், ஊழல் பெருச்சாளிகளுக்கும் பொன்னான காலமாகவும் ஆட்சியில் ஏற்றி வைத்த வாக்காள பெருமக்களுக்கு இருண்ட காலமாகவும் உள்ளது.

உலகமயமாக்கல் மூலமாக நமது கடல் பரப்பை பன்னாட்டு மீன்பிடி நிறுவனங்களுக்குத் தாரை வார்த்தனர்; பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கக் கூடாது என்று, 2009 ஆம் ஆண்டு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் இயற்றி, இந்த மீன்கள் தான் பிடிக்க வேண்டும், இவ்வளவு மீன்கள் தான் பிடிக்க வேண்டும், குறிப்பிட்ட வலை தான் பயன்படுத்த வேண்டும் என்றும், அதை மீறினால் கடுமையான அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்டத்தை, அறிமுக நிலையிலேயே எதிர்த்து முதன் முதலாக அறிக்கை வெளியிட்டு மீனவர்களுக்கு எதிரான சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தினேன்.

அதனைத் தொடர்ந்து மீனவர்களின் உறுதியான போராட்டத்தல், அச்சட்டம் நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. இருப்பினும், தங்களின் பாரம்பரியக் கடலில் மீன்பிடி தொழில் செய்ய முடியாமல் சீறிவரும் கடல் அலைகளாலும், ஆயுதம் தாங்கிய சிங்கள மிருகங்களாலும், பன்னாட்டு மீன்பிடிக் கப்பல்களாலும், தொழிற்சாலைக் கழிவு, அணுஉலை மற்றும் நச்சு ஆலைக் கழிவுகளாலும் கடல் மாசுபட்டு, மீன் பெருக்கம் இல்லாமல் செயற்கைப் பஞ்சத்தால் தமிழக மீனவர்களின் வாழ்க்கை நிலை, எடுப்பார் கைப்பிள்ளைகளாக சவலப்பிள்ளைகளாக மாறிட மத்திய காங்கிரஸ் அரசே காரணம்.

கடலில் மீன்பிடித்துவிட்டு, உயிருடன் கரைக்குத் திரும்புவோம் என்ற உத்தரவாதம் இல்லை. எனவே, தென் மாவட்ட மீனவ இளைஞர்களுக்குத் திருமணம் நடைபெறுவது தள்ளிப் போகிறது; தடைப்படுகிறது. கடலில் ஏற்படும் இயற்கைச் சீற்றத்தால் குறைந்த பட்ச வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லாததால், வட மாவட்ட மீனவர்களுக்கும் இதே நிலைதான்.

எனவே மீனவர்களை, கடல் பழங்குடியினராக அறிவித்து, வேலை வாய்ப்பு உள்ளிட்ட அரசின் அனைத்து விதமான திட்டங்கள் கிடைத்து வாழ்க்கையில் தன்னிறைவு அடைந்திட மத்திய, மாநில அரசுகள் கடமை ஆற்றிட வேண்டும்.

அடுத்த ஆண்டு, 2014 நவம்பர் 21 சர்வதேச மீனவர் தினம் கொண்டாடும் போது, நமது கடற் பரப்பில் ரத்த வாடை வீசாத நாளை உருவாக்கி, மீனவர்களின் கவலையைக் களைந்து கண்ணீர் இல்லாத ஆண்டாக மலர, காங்கிரஸ் அரசை வீட்டுக்கு அனுப்பி மக்களுக்கான மத்திய அரசு அமைத்திட, 2013 நவம்பர் 21 மீனவர் தினத்தில் சூளுரை மேற்கொள்வோம்.

1070 கி.மீ. தமிழகத்தின் பரந்துபட்ட கடல் எல்லையின் ஊதியம் பெறாத காவல் அரணாக உழைக்கும் மக்களான மீனவப் பெருங்குடி மக்களின் உரிமைகளை வென்றெடுக்க மறுமலர்ச்சி திமுக என்றும் துணை நிற்கும்" என்று வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x