Published : 28 Mar 2017 12:47 PM
Last Updated : 28 Mar 2017 12:47 PM

வெயில் காலத்தில் பால் உற்பத்தி குறையும் அபாயம்: கறவை மாடுகளை தினமும் 3 முறை குளிப்பாட்ட அறிவுரை

கோடை காலத்தில் பால் உற்பத்தி குறையும் அபாயம் உள்ளது. அதனால், கறவை மாடுகளை தினமும் 2 அல்லது 3 முறை குளிப்பாட்ட வேண்டும் என ஓய்வுபெற்ற கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் வி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோடை காலத்தில் ஏற்படும் அதிகளவு வெப்பத்தால், கறவை மாடுகளுக்கு பல சிரமங்கள் இயற்கையாகவே ஏற்படுகின்றன. அதனால், அவற்றின் பால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.

இதைத் தவிர்க்க ஓய்வுபெற்ற கால்நடைத்துறை மருத்துவ அதிகாரி வி. ராஜேந்திரன் கூறி யதாவது: கோடை காலத்தில் ஈக்களின் பெருக்கம் அதிகரிக்கும். இவை கறவை மாடுகளை அடிக்கடி வட்டமிடுவதாலும், மேலே உட்கார்ந்து தொந்தரவு கொடுப்பதாலும் கறவை மாடுகள் அமைதியற்ற நிலையில் இருக்கும். அதனால், பால் உற்பத்தி குறையும். ஈக்களை கட்டுப்படுத்தி தகுந்த மருந்தை தெளிக்க வேண்டும். மேலும், மாட்டுத் தொழுவங்களையும், அதனைச் சுற்றியுள்ள இடங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சாணம், சிறுநீர் போன்ற கழிவுப்பொருட்களை உடனுக்குடன் அகற்றுவது நல்லது. பசுந்தீவனம் அளிப்பது பால் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களில் குறைந்த அளவிலாவது கோ-3, கோ-4 பசும்புல் தீவனங்களை வளர்க்க வேண்டும்.

போதுமான அளவு காய்ந்த புல் மற்றும் குழிப்புல் மட்டுமே கொடுப்பது எல்லா வகைச் சத்துகளையும் தராது. ஆகையால் தேவையான அளவு கறவை மாடுகளின் உணவில் அடர் தீவனங்களையும் சேர்ப்பது நல்லது. பொதுவாக கறவை மாடுகளுக்கு கோடையில் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 முறை குடிக்க தண்ணீர் தர வேண்டும். வெப்பநிலையைப் பொறுத்து அவற்றின் குடிநீர் தேவையில் வேறுபாடு இருக்கும். கறவை மாடுகள் அவை திருப்தி அடையும் வரை தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். கறவை மாடுகள் தங்கள் தண்ணீர் தேவையில் மூன்றில் இரண்டு பங்கை பகல் நேரத்தில் பூர்த்தி செய்து கொள்கின்றன.

ஒவ்வொரு கறவை மாட்டுக்கும் 3-ல் இருந்து 3 ½ லிட்டர் தண்ணீர் ஒவ்வொரு லிட்டர் பால் உற்பத்தி அடிப்படையில் வழங்க வேண்டும். கடுமையான வெப்பநிலை உள்ள காலங்களில், ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை குளிப்பாட்டலாம். தண்ணீர் தட்டுப்பாடு இருந்தால், அவற்றின் உடம்பின் மேல் தண்ணீரைத் தெளிக்கலாம். வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 2 மணி வரை வெளியே மேய்ச்சலுக்கு அழைத்து செல்லக் கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x