Published : 25 Aug 2016 10:51 AM
Last Updated : 25 Aug 2016 10:51 AM
சென்னை மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற செப்டம்பர் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) ரா,அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்த, சீக்கிய, பார்சி மற்றும் ஜெயின் வகுப்பைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற ‘www.scholarships.gov.in’ என்ற இணைய தள முகவரியில் ஆன்லைன் மூலம், புதியது மற்றும் புதுப் பித்தலுக்கு ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்க ஏற்கனவே ஆகஸ்ட் 31-ம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இது தற்போது செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பித்த பின் கல்வி நிறுவனங்கள் அதை சரிபார்த்து, பெயர்ப் பட்டியலுடன் சென்னை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மையின மாணவ, மாணவியர் கல்வி உதவித் தொகையை பெற உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT