Published : 20 Jan 2016 11:27 AM
Last Updated : 20 Jan 2016 11:27 AM

அரசின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு: சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மழை நிவாரண நடவடிக்கைகள், ஜல்லிக்கட்டு விவகாரம், சாதிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசின் அணுகுமுறையைக் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையிலிருந்து திமுக, தேமுதிக, புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

கூட்டம் தொடங்கியவுடன், தமிழக சட்டப்பேரவையிலிருந்து திமுக, தேமுதிக, புதிய தமிழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து திமுக வெளிநடப்பு செய்வதாக அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் முழுமையாக ஆய்வு செய்யவில்லை. தூத்துக்குடி மாவட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி அவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறது என அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

மயிலாடுதுறை, குத்தாலம் அருகேயுள்ள திருநாள்கொண்டசேரி கிராமத்தைச் சேர்ந்த தலித் தம்பதி குஞ்சம்மாள் - செல்லமுத்து இருவரின் சடலங்களும் பொதுப் பாதையில் எடுத்துச்செல்லப்படுவது ஆதிக்கச் சாதியினரால் தடுக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டதைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு பிரச்னையை தமிழக அரசு சரியாகக் கையாளவில்லை என்று கூறியும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x