ரூ.100 கோடி போதைப் பொருட்களுடன் 22 புத்த துறவிகள் கைது

கொழும்பு விமான நிலையத்தில் அதிகாரிகள் நடவடிக்கை
தாய்லாந்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதால் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட புத்த துறவிகள்.

தாய்லாந்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதால் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட புத்த துறவிகள்.

Updated on
1 min read

ராமேசுவரம்: தாய்லாந்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்புள்ள 110 கிலோ போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி வந்த 22 புத்ததுறவிகள் கொழும்பு விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக அந்நாட்டு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், தலைநகர் கொழும்பில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, தாய்லாந்துக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு நாடு திரும்பிய 22 புத்த துறவிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அவர்கள் கொண்டு வந்த பைகளில் பள்ளி உபகரணங்கள், பல்வேறு இனிப்புகளுடன் 110 கிலோ போதைப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு துறவியின் பையில் இருந்தும் தலா 5 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி ஆகும்.

இதையடுத்து, 22 புத்த துறவிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புத்தமடாலயங்களில் தங்கியிருந்த படி உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் ஆவர்.

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த அளவுக்கு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது மற்றும் கடத்தலில் புத்த துறவிகள் குழு ஈடுபட்டது இதுவே முதல் முறை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 22 புத்த துறவிகளையும் இலங்கை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

துறவிகள் அமைப்பு கண்டனம்: போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் 22 புத்த துறவிகள் கைது செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இலங்கையின் மகாநாயக்க துறவிகள் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: புத்த துறவிக்கான உடையை அணிந்துகொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது, சட்ட விரோதமானது.

அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அவர்களை புத்த பீடங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமின்றி, இளம் துறவிகளை இதுபோல சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்துவோர் மீதும், அவ்வாறு தூண்டுவோர் மீதும், இதில் தொடர்பு உடைய அனைத்து தரப்பினர் மீதும் விரைவான, விரிவான விசாரணையை பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.புத்த துறவிகளின் உடைகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>தாய்லாந்தில் இருந்து ரூ.100 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதால் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட புத்த துறவிகள்.</p></div>
“மே. வங்கத்தில் முதல்கட்ட தேர்தலிலேயே 110 இடங்களை பாஜக வென்றுவிட்டது” - அமித் ஷா உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in