Published : 03 Dec 2013 03:09 PM
Last Updated : 03 Dec 2013 03:09 PM

கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர் உயிருடன் மீட்பு

மீன் பிடிக்கச் சென்றபோது கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர் மூர்த்தி, தனுஷ்கோடி அருகே இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை மீட்கப்பட்டார்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த நவம்பர் 30ம் தேதி 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் அனைவரும் டிசம்பர் 1-ம் தேதி அதிகாலையில் இருந்தே கரைக்கு திரும்பிய வண்ணம் இருந்தனர். இதில் டக்ளஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ஆறுமுகம், மாரிமுத்து, மூர்த்தி, மூக்காண்டி மற்றும் ஜஸ்டின்ராஜ் ஆகிய ஐந்து மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ஆனால் 5 மீனவர்களில் மூர்த்தி என்பவர் மட்டும் மீனவர்கள் கரைக்கு திரும்பிய போது கடலில் தவறி விழுந்தார்.

கடலில் மாயமான மீனவர் மூர்த்தியை சக மீனவர்கள் உதவியுடன் மூன்று விசைப்படகுகளில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இருந்து மீனவர்கள் தேடி வந்தனர்.

பின்னர், மீனவர் கடலில் மாயமானது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடமும், மண்டபம் கடலோர காவல் படையினரிடமும் படகின் உரிமையாளர் டக்ளஸ் புகார் செய்தார். இதனைத் தொடர்ந்து கடலோர காவல் படையும் காணாமல் போன மீனவர் மூர்த்தியை தேடும் பணியை துவங்கினர்.

இந்நிலையில், இன்று அதிகாலை பொன்னலகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்து விட்டு ராமேஸ்வரம் திரும்பிய விசைப்படகின் டிரைவர் முனியசாமி கடலில் மீனவர் ஒருவர் தத்தளித்துக் கொண்டிருப்பதை பார்த்தார். உடனே அருகில் படகை செலுத்தி கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர் மூர்த்தியை கடலில் குதித்து சக மீனவர்களின் உதவியுடன் தமது விசைப்படகில் ஏற்றிக் காப்பாற்றினார்.

பின்னர், ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்ட மீனவர் மூர்த்தி, மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலில் தொடர்ச்சியாக இரண்டு நாள் தத்தளித்துக் கொண்டிருந்தால் மீனவர் மூர்த்திக்கு ஒரு வார காலம் மருத்துவ சிகிச்சையுடன் ஓய்வு தேவை என மருத்துவர்கள் கூறினர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x