Published : 29 Aug 2016 07:25 PM
Last Updated : 29 Aug 2016 07:25 PM

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுக: கேரள அரசுக்கு ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தல்

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியை கேரள அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் எல்லைப் பகுதியான அட்டப்பாடி வனப்பகுதியில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தில் - சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான அனுமதியை கேரள அரசு பெற்றுள்ளது.

அணை கட்டுவது தொடர்பாக கேரள அரசும், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையும் தமிழக அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதியும், தமிழக அரசு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. தமிழக அரசின் இந்த அலட்சியத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினால் ஆற்றின் வழியாக தமிழகத்தின் பவானி ஆற்றிற்கு வரும் தண்ணீர் தடைபடும் நிலை ஏற்படும். இதனால் கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் பெருமளவு பாதிப்புக்குள்ளாகும். 1980களில் அணை கட்டுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் இந்த அணை தேவையற்றது என்று கருதப்பட்டதால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அணை கட்டும் பணிகள் நடைபெறவில்லை. தற்போது தமிழக அரசின் அலட்சியப் போக்கு காரணமாகவே மத்திய அரசு சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான அனுமதியை கேரளத்திற்கு வழங்கியுள்ளது.

தமிழக மேற்கு மாவட்டங்களின் குடிநீர் ஆதாரம் சார்ந்த இந்த பிரச்சினையில் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டுமெனவும், மத்திய அரசு கேரள அரசுக்கு வழங்கியுள்ள சூழலியல் தாக்க மதிப்பீட்டு ஆய்வுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டுமெனவும், அணை கட்டும் முயற்சியினை கேரள அரசு கைவிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x