Published : 04 Mar 2017 09:02 AM
Last Updated : 04 Mar 2017 09:02 AM

நியூட்ரினோ திட்டம் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்



நியூட்ரினோ திட்டம் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர் குழு பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித் துள்ளது.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர் ராஜன், தேசிய பசுமை தீர்ப் பாயத்தின் தென்னிந்திய அமர்வில் கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தேனி மாவட்டத்தில்..

மத்திய அரசு, மிகப்பெரிய அறிவியல் சார்ந்த திட்டமான நியூட்ரினோ ஆய்வு மையத்தை, தேனி மாவட்டத்தில் அமைக்கவுள்ளது. இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த 2011-ல் வழங்கியுள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ள பகுதியைச் சுற்றி முக்கிய நீராதாரங்கள் உள்ளன. இந்நிலையில் இத்திட்டம் தொடர்பாக விரிவாக சுற்றுச்சூழல் தாக்கம் மதிப்பீடு செய்யப்படவில்லை. அதனால் இத்திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதை விசாரித்த அமர்வு, இத்திட்டம் தொடர்பாக தமிழக அரசு நிபுணர் குழு அமைத்து, திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர் ஆஜராகி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவின் பெயர்கள், அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் அண்ணா பல்கலைக்கழக எரிசக்தி ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆர்.வேல்ராஜ், சென்னை பல்கலைக்கழக நிலப்பண்பியல் துறை பேராசிரியர் எம்.சுரேஷ் காந்தி, முன்னாள் தலைமை வனப் பாதுகாவலர் எஸ்.பாலாஜி, சென்னை பல்கலைக்கழக அணு இயற்பியல் துறை பேராசிரியர் கே.சிவாஜி, அண்ணா பல்கலைக்கழக வேதியியல் துறை தலைவர் ஏ.பாண்டுரங்கன், அண்ணாமலை பல்கலைக்கழக சுற்றுச்சூழல் மைய இயக்குநர் நேரு குமார் வைத்தியலிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அந்த குழுவுக்கு அரசு ஒப்புதல் அளித்த பின், அந்த குழு ஆய்வு மேற்கொண்டு அறிக்கை அளிக்கும் என்றார்.

அதனைத் தொடர்ந்து மனு மீதான விசாரணை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x