Last Updated : 01 Nov, 2016 10:22 AM

 

Published : 01 Nov 2016 10:22 AM
Last Updated : 01 Nov 2016 10:22 AM

ஹெல்மெட் அணியாதவர்கள் மீது 15 மாதங்களில் 4 லட்சத்து 43 ஆயிரம் வழக்குகள்: அபராதம் கட்ட அலைக்கழிக்கப்படும் வாகன ஓட்டிகள்

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக சென்னையில் மட்டும் கடந்த 15 மாதங்களில் 4 லட்சத்து 43 ஆயிரத்து 657 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அபராதம் கட்ட முடியாமல் சில இரு சக்கர வாகன ஓட்டிகள் அலைய விடப்படுகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் 67 ஆயிரத்து 250 சாலை விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் 15 ஆயிரத்து 190 பேர் உயிரிழந்தனர். அதேபோல் 2015-ம் ஆண்டு நிகழ்ந்த 69 ஆயிரத்து 59 சாலை விபத்துகளில் 15 ஆயிரத்து 642 பேர் பலியானார்கள். இந்த ஆண்டும் அதிக அளவில் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் தொடர்கின்றன.

சாலை விபத்துகளில் உயிரிழப் பவர்களில் இருசக்கர வாகன ஓட்டி களே அதிகமாக உள்ளனர். குறிப் பாக ஹெல்மெட் அணியாத இரு சக்கர ஓட்டிகள்தான் பெரும்பாலான சாலை விபத்துகளில் உயிரிழக்கின் றனர். இந்த சூழலில்தான் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வதை கட்டாயமாக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தீவிரமாக காவல் துறை அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச் செல்வோரைக் கண்காணித்து, சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்கும்படி காவல் துறையினருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.

அதன்படி, போக்குவரத்து கூடு தல் ஆணையர் அபய் குமார் சிங் மேற்பார்வையில் வட சென்னை இணை ஆணையர் எம்.டி.கணேச மூர்த்தி, தென் சென்னை இணை ஆணையர் கே.பவானீஸ்வரி ஆகி யோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தினமும் 200 இடங்களில் சுழற்சி முறையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் கடந்த மாதம் 15-ம் தேதி வரை 4 லட்சத்து 43 ஆயிரத்து 657 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 25-ம் தேதி வரை சுமார் ஒரு மாதத்தில் மட்டும் 64 ஆயிரத்து 890 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல் துறையினரின் இத்தகைய தீவிரமான தொடர் நடவடிக்கைகள் காரணமாக தற்போது சென்னையில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அபய் குமார் சிங் கூறும்போது, “இரு சக்கர வாகன ஓட்டிகளின் நன்மைக் காகவே நாங்கள் செயல்படு கிறோம். எங்களின் நடவடிக்கை யால் சென்னையில் தற்போது சுமார் 95 சதவீதத்தினர் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர். மற்றவர் களும் விரைவில் ஹெல்மெட் அணிவார்கள் என்று நம்புகிறோம்” என்றார்.

அபராத வசூலிப்பு எப்படி?

ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டியை போக்கு வரத்து போலீஸார் வழி மறித்து அவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்ததற்கான ரசீதை கொடுக்கின் றனர். பின்னர் வாகன ஓட்டியின் ஆர்.சி. புத்தகம், ஓட்டுநர் உரிமத்தை சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஆய்வாளர் பெற்றுக்கொள்கிறார். அபராத தொகையை நடமாடும் நீதிமன்றத்தில் கட்டி அதற்கான ரசீதையும், ஹெல்மெட் வாங்கியதற் கான ரசீதையும் காட்டினால் போலீஸார் பறிமுதல் செய்த ஆவணங்களை திரும்ப கொடுத்துவிடுவார்கள்.

நடமாடும் நீதிமன்றம்

சென்னையில் 135 காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டு மொத்தம் 2 நடமாடும் நீதிமன்ற வாகனங்கள் மட்டுமே உள்ளன. இதனால், தண்டனைக்கு உள்ளாகும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ரூ.100 அபராதம் கட்ட வாரக்கணக்கில் அலைய வேண்டியுள்ளது. எனவே, உடனடியாக அபராதம் செலுத்தும் (ஸ்பாட் ஃபைன்) திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் கூறியதாவது:

ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிச் சென்றால் போலீஸார் ரூ.100 அபராதம் விதிக் கின்றனர். ஓட்டுநர் உரிமம் அல்லது வாகனத்துக்கான ஆர்.சி. புத்தகத்தை பறிமுதல் செய்துவிடு கின்றனர். அதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸார் குறிப்பிடும் நாளில் நடமாடும் நீதிமன்றம் இருக்கும் இடத்துக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும். அங்கு சில நேரங்களில் 50 பேருக்கு மட்டுமே அபராதம் வசூலிக்கப்படும்.

மீதம் உள்ளவர்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அதையும் தாண்டி பல நாட்கள் அலைந்து அபராதம் செலுத்தி னாலும், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணத்தை போலீஸார் உடனே வழங்குவது கிடையாது. மாறாக காவல் நிலையத்துக்கு வேறு ஒரு நாளில் வரவழைக்கின்றனர். அன்று நாம் சென்றால் “சம்பந்தப்பட்ட போலீஸார் இல்லை. இன்று போய் வேறு ஒருநாள் வாருங்கள்” என்று கூறி அனுப்பிவிடுகின்றனர்.

அங்கும் சில நாட்கள் அலைக் கழிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட போலீ ஸார் வந்தால் அவர் காவல் நிலையத்தில் வைத்து, ஏற்கெனவே பறிமுதல் செய்த ஆவணத்தை பெரும்பாலும் கொடுப்பது இல்லை. மாறாக தனியாக ஒரு இடத்துக்கு மொத்தமாக வரவழைத்து அங்கு வைத்து கொடுக்கிறார். அப்போது சில போலீஸார் பணம் பெறுகின்றனர். பணம் கொடுக்க மறுப்பவர்கள் மேலும் அலைக்கழிக்கப்படுகின்றனர். இப்படி சில போலீஸாரின் செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டி மாதக்கணக்கில் அலைய வேண்டியுள்ளது. எனவே, ஸ்பாட் ஃபைன் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே இதுபோன்ற சிக்கலை தவிர்க்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x