Published : 24 Dec 2013 12:00 AM
Last Updated : 24 Dec 2013 12:00 AM

ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி: தந்தை, மகன், மேலாளர் கைது

தமிழகம் முழுவதும் ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி நூதன முறையில் ரூ.5 கோடி அளவுக்கு சென்னையைச் சேர்ந்த நிறுவனத்தின் இயக்குநரான தந்தை, மகன் மற்றும் மேலாளரை திண்டுக்கல் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). இவரது மனைவி சாயிப். மகன் சாமுவேல் (31). இவர்கள் அபாகஸ் ஆன்லைன் என்னும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இவர்களுடைய நிதி நிறுவனக் கிளைகள் செயல்படுகின்றன. இவர்கள் டைமண்ட், கோல்டு, சில்வர் மற்றும் பிளாட்டினம் என்ற பெயர்களில் இரட்டிப்பு ஆன்லைன் மீட்டர் வட்டி தருவதாகக் கூறி தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்துள்ளதாகக் கூறப் படுகிறது.

இவர்கள் கூறியபடி பணம் முதலீடு செய்தவர்களுக்கு வட்டி வழங்கப்படவில்லையாம். இவர்களுடைய விருதுநகர் கிளை நிறுவனத்தில் சென்னை திருநீர்மலையைச் சேர்ந்த ராஜேந்திரன் (32) என்பவர் ரூ.64 லட்சத்து 50 ஆயிரம் முதலீடு செய்துள்ளார்.

இவருக்கு அவர்கள் கூறியபடி வட்டி வழங்கப்படவில்லை. உடனே ராஜேந்திரன் தான் முதலீடு செய்த பணத்தை திருப்பித் தரும்படி கேட்டுள்ளார். அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கருணாகரன் (பொ) தலைமையில் தனிப்படை போலீஸார் இதை விசாரித்தனர். விசாரணையில் மோசடிக் கும்பல் சென்னையில் இருப்பது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீஸார் திங்கள்கிழமை சென்னை சென்று அபாகஸ் நிதி நிறுவன இயக்குநர்கள் சுந்தர்ராஜ், அவரது மகன் சாமுவேல், மேலாளர் வசந்தகுமாரி (36) ஆகியோரைக் கைது செய்தனர். சாயிப் தலைமறைவானார்.

கைது செய்யப்பட்ட 3 பேரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை இரவு விசாரணைக்காக விருது நகருக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த மோசடிக் கும்பல், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ரூ.5 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், புகார் செய்யும்பட்சத்தில் ஏமாற்றப்பட்டவர்கள் பட்டியல், மோசடி செய்த மொத்த தொகை விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x