Published : 07 Jan 2017 08:34 AM
Last Updated : 07 Jan 2017 08:34 AM

வழக்குகள் காரணமாக புதிய பாஸ்போர்ட் வழங்க மறுப்பு: நடிகை குஷ்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கு

குற்றவியல் வழக்குகள் காரணமாக தனக்கு பாஸ்போர்ட் வழங்க முடியாது என பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் 1988 முதல் சினிமாவில் நடித்து வருகிறேன். தற்போது டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளேன். என்னுடைய பாஸ்போர்ட் 9.3.2012 முதல் 8.3.2022 வரை, 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். ஆனால் நான் குடும்பத்தோடு அடிக்கடி வெளிநாடு சென்று வந்ததால், என்னுடைய பாஸ்போர்ட்டின் பக்கங்கள் தீர்ந்து விட்டன. இதனால் பாஸ்போர்ட்டில் உள்தாள் இணைப்பு வழங்கக்கோரி விண்ணப்பித்தேன். ஆனால் உள்தாள் இணைப்பு வழங்கும் நடவடிக்கை தற்போது இல்லை என்று கூறி, அதற்குப் பதிலாக புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்க அறிவுறுத்தினர். இதனால் புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்தேன்.

ஆனால் என் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக்கூறி பாஸ்போர்ட்டை புதுப்பித்து தரவில்லை. கடந்த 2009-ல் பிரபலமான அரசியல் கட்சி ஒன்றில் (திமுக) இணைந்தேன். 2011 சட்டசபை தேர்தலின்போது தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் பழனிசெட்டிப்பட்டி போலீஸார் என் மீது சட்டவிரோதமாக கூட்டம் கூட்டியதாகவும், அரசு அதிகாரியின் உத்தரவை மீறி செயல்பட்டதாகவும் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல திண்டுக்கல் மாவட்டம் நத்தம் போலீஸாரும் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த 3 வழக்குகளிலும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து விசாரணைக்கு இடைக்கால தடையும், முன்ஜாமீனும் பெற்றுள்ளேன். ஆனால் மண்டல பாஸ்போர்ட் அதிகாரிகள், இந்த வழக்குகளைக் காரணம் காட்டி எனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க மறுக்கின்றனர். கடந்த டிசம்பர் 30-ம் தேதி குடும்பத்துடன் வெளிநாடு செல்ல முடிவு செய்திருந்தேன். ஆனால் எனது பாஸ்போர்ட் பிரச்சினையால் வெளிநாடு செல்ல முடியவில்லை. ஆகவே எனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன், இதுதொடர்பாக மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x