Published : 29 Dec 2013 10:55 PM
Last Updated : 29 Dec 2013 10:55 PM

வெளிநாட்டு பல்கலைகழகங்களை இந்தியாவில் புகுத்த முயற்சி: கி.வீரமணி குற்றச்சாட்டு

வெளிநாட்டில் 'போணியாகாத' சில பல்கலைக்கழங்களை இங்கே கொண்டு வர தன்னிச்சையாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் முடிவு செய்துள்ளார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.



இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயர்கல்வி பயின்றவர்கள் சீனாவில் 20 சதவீதம் என்றால் நம் நாட்டில் 6 முதல் 8 சதவீதம்தான் உள்ளனர். இந்த நிலையை மாற்ற , நம்நாட்டில் ஒரு புறத்தில் புதிதாக 1500 பல்கலைக்கழகங்கள் உருவாக வேண்டும் என்று அறிவுசார் ஆணையம் பரிந்துரைக்கிறது. 1500க்கு மேல் தேவை என்று 11வது ஐந்தாண்டுத் திட்டமும் பரிந்துரை செய்துள்ளது.

வெளிநாட்டில் 'போணியாகாத' சில பல்கலைக்கழங்களை இங்கே கொண்டு வர தன்னிச்சையாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் முடிவு செய்துள்ளார். இந்தியாவில் துவங்கப்பட்ட நிகர்நிலைப் பல்கலைக்கழங்கள் மீது வீண் பழி சுமத்தி கடந்த நான்காண்டுகளாக அவற்றின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்.

இந்த ஆண்டு மேலும் 269 புதிய பல்கலைக்கழகங்கள் துவங்கப் போவதாகவும், ஏற்கெனவே உள்ள பல்கலைக்கழகங்களோ, கல்லூரிகளோ வெளிநாட்டு, உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் எது செய்தாலும் மத்திய கல்வித் துறையின் முன் அனுமதி பெற்றாக வேண்டும் என்று புதிய அறிவிப்புகள் வந்திருப்பதும் மிகவும் கண்டனத்துக்குரியன.

பல்கலைக்கழகங்களில் தேவையற்ற அரசியல் தலையீடுகளோ , குறுக்கீடுகளோ இருக்கக் கூடாது. தவறுகள் நடந்தால் மட்டுமே அரசுகள் குறுக்கிட வேண்டும். ஏற்கெனவே உள்ள பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் வளர்ச்சியடைய வழி காட்டினால் அது சமூக முன்னேற்றத்துக்கு உதவும். மத்திய அரசு இந்த விஷயத்தில் உடனே தலையிட வேண்டும்" என்று கி.வீரமணி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x