Published : 23 Apr 2017 09:28 AM
Last Updated : 23 Apr 2017 09:28 AM

இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 4-வது நாளாக தொடரும்: டாக்டர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பாதிப்பு - நாளை விடுப்பு எடுத்து போராட முடிவு

மருத்துவ பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி 4-வது நாளாக நேற்றும் டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நாளை தமிழகம் முழுவதும் அனைத்து அரசு டாக்டர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் மருத்துவ பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டை பெற அவசர சட்டத்தை இயற்ற வேண்டும், இடஒதுக்கீடு தொடர்ந்து கிடைத்திட சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் கடந்த 4 நாட்களாக டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள், மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் தர்ணா, உண்ணாவிரதம், புறநோயாளிகள் பிரிவு மற்றும் திட்டமிட்ட அறுவைச் சிகிச்சைகள் புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள் 4-வது நாளாக நேற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வந்த ஏழை நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர்.

தமிழ்நாடு மருத்துவ அலுவலர் கள் சங்கத்தின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் டிஎம்எஸ் வளாகத்துக்கு வந்து டாக்டர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

டாக்டர்களின் தொடர் போராட்டம் பற்றி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் கூறும்போது, “அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும். நாளை (இன்று) மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. வரும் 24-ம் தேதி (நாளை) தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் அனைவரும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x