Last Updated : 17 Aug, 2016 07:59 AM

 

Published : 17 Aug 2016 07:59 AM
Last Updated : 17 Aug 2016 07:59 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதி, நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு: 2 கட்டமாக நடந்த தேர்வை 10 லட்சம் மாணவர்கள் எழுதினர்

நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்காக 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப் படுகின்றன. இதர 85 சதவீத இடங்கள், அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதே போல தனியார் மருத்துவக் கல்லூரி களில் உள்ள அரசு ஒதுக்கீட் டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் கலந்தாய்வு மூலமா கவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் கல்லூரி நிர்வாகங்கள் மூலமாகவும் நிரப்பப்பட்டன.

ஆண்டுதோறும் அகில இந்திய ஒதுக்கீட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்ப அகில இந்திய மருத்துவம், பல் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வை (AIPMT) மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வந்தது. 2016-17ம் கல்வி ஆண்டுக்கான நுழைவுத்தேர்வு கடந்த மே 1-ம் தேதி நடத்தப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்தது. தமிழகத்தில் இருந்து 26 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 6.60 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

இந்த சூழலில், உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘‘அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஆகியவை தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) என்ற ஒரே நுழைவுத்தேர்வு மூலமாகவே நிரப்பப்பட வேண்டும். மே 1-ம் தேதி நடக்கும் அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவப் படிப்பு நுழைவுத்தேர்வை, முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வாக கணக்கில் கொள்ள வேண்டும். ஜூலை 24-ம் தேதி 2-வது கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். முதல்கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்காத வர்கள் 2-ம்கட்ட தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதலாம்’’ என்று தெரிவித்தது.

இதன்படி, சிபிஎஸ்இ கடந்த மே 1-ம் தேதி நடத்திய முதல்கட்ட தேசிய தகுதித் தேர்வை நாடு முழுவதும் சுமார் 6 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த 26,000 பேரில் 22,750 பேர் தேர்வு எழுதினர். 2-ம்கட்ட தேர்வு ஜூலை 24-ம் தேதி நடந்தது. நாடு முழுவதும் சுமார் 4.75 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் இருந்து விண்ணப்பித்த 14,500 பேரில் 13,500 பேர் தேர்வு எழுதினர்.

இணையதளத்தில் அறியலாம்

இந்நிலையில், 2 கட்டங்களாக நடத்தப்பட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. www.aipmt.nic.in மற்றும் www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். வரிசை எண், பிறந்த தேதியை பதிவு செய்து, தேர்வு முடிவுகளுடன், தரவரிசைப் பட்டியலையும் பார்க்க முடியும். ஆன்லைன் மூலமாகவும், நேரடி யாகவும் அடுத்த வாரம் கலந் தாய்வை தொடங்க திட்டமிடப் பட்டுள்ளது.

எத்தனை இடங்கள்?

தமிழகத்தில் உள்ள 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 397 எம்பிபிஎஸ் இடங்கள், 6 தனியார் (சுயநிதி) கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் 760 எம்பிபிஎஸ் இடங்கள், 2 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் 30 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 பிடிஎஸ் இடங்கள், 17 தனியார் (சுயநிதி) பல் மருத்துக் கல்லூரிகளில் 640 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த இடங்கள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x