Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM

தடை செய்யப்பட்ட வலையைப் பயன்படுத்த எதிர்ப்பு: நாட்டுப் படகு மீனவர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

தடை செய்யப்பட்ட வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்துவதைத் தடுக்க வலியுறுத்தி ராமேசுவரம், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை நீடித்தது. மீன்வளத் துறை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட விசைப்படகு மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழக விசைப்படகு மீனவர்கள் வாருதல் எனப்படும் இரட்டைமடி, சுருக்குமடி போன்ற மீன்பிடி முறைகளை 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மீன்பிடி முறையால் அனைத்து வகை கடல்வாழ் உயிரினங்களும் பிடிபடுகின்றன. இதனால் கடலுக்கடியில் இருக்கும் சூழல் மண்டலம் பாதிக்கப்படுகிறது. பவளப்பாறைகள் சிதைக்கப்படுகின்றன. சுருக்கமாக சொல்லப்போனால் காடுகளை வெட்டி அழிப்பது போலத்தான்.

கடல் வளம் அழிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் மீனவர்கள் இரட்டைமடி, சுருக்குமடி முதலிய வற்றைப் பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் விசைப்படகு மீனவர்கள் பலர் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதாக நாட்டுப் படகு மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவோரைக் கண்டித்து ராமேசுவரம், பாம்பன் பகுதி நாட்டுப்படகு மீனவர்கள் ஞாயிற்றுக் கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இப்போராட்டம் இரண்டாவது நாளாக திங்கள் கிழமையும் நீடித்தது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன் கடற் கரைகளில் ஆழமில்லாப் பகுதிகளில் நாட்டுப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து நாட்டுப் படகு மீனவர்கள் சங்கப் பிரநிநிதி ராயப்பன் கூறியதாவது:

விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடிகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதைத் தடுக்க வலியுறுத்தி ராமேசுவரம், பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை வேலைநிறுத்தம் செய்து வருகிறோம். செவ்வாய்க் கிழமை ராமேசுவரம் மீன்வளத் துறை அலுவலகம் எதிராக முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம்.

கடந்த ஜனவரி 27-ம் தேதி சென்னையில் தமிழக-இலங்கை மீனவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையின் முக்கிய ஷரத்தே இருநாட்டு மீனவர்களும் தடை செய்யப்பட்ட வலையில் மீன்பிடிக்கக் கூடாது என்பதுதான்.

விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து தடை செய்யப்பட்ட வலையில் மீன்பிடிப்பதால்தான் பாக் ஜலசந்தி கடற்பரப்பு, மன்னார் வளைகுடா பகுதிகளில் மீன்வளம் அழிந்து வருகிறது. இந்த வலைகளை விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தாமல் நிறுத்தினால்தான், இருநாட்டு மீனவர்களிடமும் சுமுக உறவு ஏற்படும். தடை செய்யப்பட்ட வலைகளில் மீன்பிடிப்பதைத் தமிழக அரசும், மீன்வளத்துறையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x