Published : 28 Oct 2015 10:00 AM
Last Updated : 28 Oct 2015 10:00 AM

பராமரிப்பு பணி காரணமாக வைகை, குருவாயூர் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்

பராமரிப்பு பணி காரணமாக வைகை, குருவாயூர் உள்ளிட்ட சில ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

விருத்தாச்சலம்-திருவெண்ணைநல்லூர் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்களை மாற்றுப் பாதையில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, லோகமான்யா திலக் சந்திப்பு-மதுரை வாராந்திர விரைவு ரயில் (வண்டி எண்.11043/44), மங்களூர்-புதுச்சேரி விரைவு ரயில் (16856) ஆகியவை

வரும் 31-ம் தேதி விழுப்புரம், கடலூர் துறைமுக சந்திப்பு, விருத்தாச்சலம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும்.

இதேபோல், சென்னை எழும்பூர்-குருவாயூர் விரைவு ரயில் (16127) நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி வழியாக இயக்கப்படும்.

இதே ரயில் நவம்பர் 2-ம் தேதி மட்டும் விழுப்புரம், கடலூர் துறைமுக சந்திப்பு, விருத்தாச்சலம் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். மேலும், மதுரை-சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) நவம்பர் 2-ம் தேதி விருத்தாச்சலம், விழுப்புரம் மார்க்கத்தில் இயக்கப்படும்.

இதே ரயில் நவம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் மார்க்கத்தில் இயக்கப்படும். நாகர்கோயில்-மும்பை விரைவு ரயில் (16352) நவம்பர் 5-ம் தேதி திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் மார்க்கத்தில் இயக்கப்படும்.

ரயில்கள் ரத்து

மதுரை-விழுப்புரம் பயணிகள் ரயில் (56706/05) வரும் 31-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை திருச்சி-விழுப்புரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இதேபோல், சேலம்-விருத்தாச்சலம் பயணிகள் ரயில் (76849/48) வரும் 31-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதி வரை சின்ன சேலம்-விருத்தாச்சலம் இடையேயும், காரைக்கால்-பெங்களூர் பயணிகள் ரயில் (56513) நவம்பர் 2 முதல் 6-ம் தேதி வரை காரைக்கால்-சேலம் இடையேயும், பெங்களூர்-காரைக்கால் (56514) பயணிகள் ரயில் நவம்பர் 1 முதல் 5-ம் தேதி வரை சேலம்-காரைக்கால் இடையேயும் ரத்து செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x