Published : 28 Mar 2014 05:17 PM
Last Updated : 28 Mar 2014 05:17 PM

ஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது அதிர்ச்சியளிக்கிறது: பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஐக்கிய நாட்டு மனித உரிமை கழகத்தில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா ஓட்டளிக்காமல் புறக்கணித்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த இனப்படுகொலையை விசாரிக்க வேண்டுமென உலக நாடுகள் குரல் கொடுத்து வரும் நிலையில் இந்தியா நேற்று மனித உரிமை கழகத்தில் விவாதிக்கப்பட்ட தீர்மானத்தில் எடுத்த நிலைப்பாடு தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய காங்கிரஸ் அரசு இலங்கை விவகாரங்களில் எந்த அளவிற்கு தமிழர் நலனுக்கு எதிரான மனோபாவத்தோடு உள்ளது என்பது நேற்று அரசு எடுத்த நிலைபாட்டின் மூலம் தமிழர்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

தமிழ் இனப் படுகொலைக்கு காராணமான ராஜபக்சே அரசோடு கைகோர்த்து கொண்டு செயல்படும் மத்திய காங்கிரஸ் அரசை தமிழக பாரதிய ஜனதா கட்சி கண்டிக்கிறது" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x