Published : 17 Dec 2013 02:42 PM
Last Updated : 17 Dec 2013 02:42 PM

புதுக்கோட்டை மீனவர்கள் 50 பேரின் காவல் நீட்டிப்பு: மீண்டும் மீனவர்கள் சிறையில் அடைப்பு

புதுக்கோட்டை மீனவர்கள் 50 பேரின் காவலை இலங்கை நீதிமன்றம் செவ்வாய்கிழமை (இன்று) மீண்டும் டிசம்பர் 30 வரை நீட்டித்து உத்திரவிட்டது.

கடந்த நவம்பர் 20 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டை பட்டினம் பகுதியை சேர்ந்த ஆனந்த், குமரேசன், குரளரசன, முத்தையா ஆனந்த் உள்ளிட்ட 20 மீனவர்கள் கோடியக்கரையிலிருந்து 20 நாட்டிகல் மைல் தொலைவில் தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் 20 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களுக்கு 5 விசைப் படகுகளையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் 20 பேரையும் இலங்கை காங்கேசன் துறைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.நவம்பர் 21ம் தேதி மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள், யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதே போன்று கடந்த டிசம்பர் 12ம் தேதி அதிகாலை நெடுந்தீவுப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 30 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 50 பேரின் காவல் செவ்வாய்கிழமை முடிவடைந்ததை அடுத்து மீண்டும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மீனவர்களை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்கள் 50 பேருக்கும் டிசம்பர் 30ம் தேதி வரை காவலை நீட்டித்து உத்திரவிட்டார். இதனைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் 50 பேரும் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x