Published : 17 Apr 2017 08:06 AM
Last Updated : 17 Apr 2017 08:06 AM

குடிநீரை வீணாக்கும் ஒப்பந்த லாரிகள்: வாரியத்தின் உத்தரவு பின்பற்றப்படவில்லை

சென்னையில் குடிநீர் பாற்றாக்குறையை சமாளிக்க குடிநீர் லாரிகளில் இருந்து நீர் கசிந்து வீணாவதைத் தடுக்க குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் உத்தரவிட்டுள்ள நிலையில், அதிகாரிகள் அதை முறையாக பின்பற்றாததால், லாரிகளில் இருந்து குடிநீர் கசிந்து சாலைகளில் ஓடி வீணாகி வருகிறது.

சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகள் உள்ள திருவள்ளூர் மாவட்டம், கடலூர் மாவட்டங்களில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், அந்த ஏரிகள் வறண்டு வருகின்றன. மேலும் குடிநீருக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டிய இன்றைய சூழலில் எக்காரணம் கொண்டும் குடிநீரை சாலைகளில் வீணாக்கக் கூடாது. குடிநீர் வாரியத்தின் நீர் பகிர்ந்து அளிக்கும் நிலையங்களில், நீரை நிரப்ப வரும் வாரியத்தின் ஒப்பந்த லாரிகளில், நீர் கசிவு இருந்தால், லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் பேசி, சரி செய்த பின்னரே, அந்த லாரியை குடிநீர் விநியோகத்துக்கு அனுப்ப வேண்டும். இனி வரும் காலங்களில் அவ்வாறு லாரிகளில் விநியோகம் செய்வதற்காக செல்லும்போது சாலைகளில் கசிவு ஏற்பட்டால், சம்மந்தப்பட்ட லாரி உரிமையாளர் அல்லது ஓட்டுநருக்கு அபராதம் விதிப்பதோடு, அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று குடிநீர் வாரிய பகுதி பொறியாளர்களுக்கு வாரியத்தின் மேலாண் இயக்குநர் அருண் ராய் உத்தரவிட்டிந்தார்.

இந்த உத்தரவு சில தினங்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்பட்டது. தற்போது வழக்கம் போலவே, லாரிகளிகள் இருந்து நீர் கசிந்து, சாலைகளில் ஓடி வீணாகி வருகிறது. இதை அந்தந்த நீர் பகிர்ந்தளிப்பு நிலைய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.

இது தொடர்பாக குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தொடர்ந்து கண்காணித்து, குடிநீர் சாலையில் கசிந்து வீணாவது தடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x