Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு

அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மளிகை உள்ளிட்ட பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. சில பொருட்களின் விலை இரு மடங்காகிவிட்டது. கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தால் கட்டுமானத் தொழில்கள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார். தமிழகத்தில் பால் விலை, பஸ் கட்டணம், மின்சாரக் கட்டணம் உயர்ந்ததற்கு யார் காரணம்? கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு பலமுறை உயர்த்தியபோதும், பொதுமக்களின் நலன் கருதி பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. இப்போது பஸ் கட்டணம் இருமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல் மின்சாரக் கட்டண உயர்வு, பால் விலைஉயர்வு போன்றவற்றால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விலை வாசி உயர்வுக்கு மற்றவர் கள் மீது பழியைப் போட்டு தப்பிக்க முயல்கிறார். ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவது பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x