Published : 20 Jun 2015 08:06 AM
Last Updated : 20 Jun 2015 08:06 AM

மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்கு: தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம்

கொளத்தூர் தொகுதி சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றிப் பெற்றதை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

தமிழக சட்டசபைக்கு கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை எதிர்த்து, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சைதை துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மனுவில், ‘தேர்தலின்போது மு.க.ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பில் இருந்ததால், அவர் தேர்தல் வெற்றிக்காக தனது அதி காரத்தை தவறாகப் பயன்படுத்தி னார். மகளிர் சுய உதவிக் குழுக் களை தனது பிரச்சாரத்துக்கு ஆதரவாக பயன்படுத்தினார். தேர் தலில் ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டதால்தான் அவரால் வெற்றி பெற முடிந்தது. எனவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கை நீதிபதி எம்.வேணு கோபால் விசாரித்து வருகிறார். கடந்த 12-ம் தேதி வழக்கு விசா ரணைக்கு வந்த போது சைதை துரை சாமி அனுப்பிய புகார் மனுக்கள் தொடர்பாக ஜூன் 19-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா வுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், நீதிபதி வேணுகோபால் முன்பு வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேரில் ஆஜராகி சாட்சியம் அளித் தார். அவரிடம், மு.க.ஸ்டாலினின் வழக்கறிஞர் பி.ஆர்.ராமன், சந்தீப் சக்சேனாவிடம் குறுக்கு விசாரணை செய்தார். சட்டசபை தேர்தலின்போது, சைதை துரைசாமி சார்பில் 16 புகார்கள் தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்டன. இப்புகார்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த சந்தீப் சக்சேனா, ‘‘2011-ம் ஆண்டு தேர்தல் நடைபெறும்போது தலைமை தேர்தல் அதிகாரியாக நான் பதவியில் இல்லை. மேலும், தேர்தல் தொடர்பாக வரும் புகார் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு பரிந்துரை செய்யப்படும். எனவே, சைதை துரைசாமி அளித்த புகார்கள் குறித்த ஆவணங்களை பரிசீலித்த பின்னர்தான் கூற முடியும்’’ என்றார்.

இதையடுத்து வழக்கு விசா ரணையை ஜூலை 10-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x