Published : 25 Jun 2016 09:06 AM
Last Updated : 25 Jun 2016 09:06 AM
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய இயலாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இக்கொலை வழக்கை சிபிஐ விசாரித்ததாலும், ஆயுள் தண்டனைக் கைதியை மாநில அரசு முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாலும் நளினியை விடுதலை செய்ய முடிய வில்லை என்று அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உள்துறை துணை செயலர் டேனியல் தாக்கல் செய்த பதில் மனு விவரம்:
இருபது ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதி களை முன்கூட்டியே விடுவிக்கலாம் என்று 1994-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, 20 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டதால் தன்னையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினார். ஆனால், அதன்மீது அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனை யாகக் குறைத்து 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இவர்களுக்கான தண்டனையைக் குறைக்க மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த லாம் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான உத்தரவையும் பிறப்பித்தது.
இந்த வழக்கை சிபிஐ விசாரித்த தால், மேற்கண்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசின் கருத்தைக் கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதியது. இதற்குப் பதில் தருவதற்கு பதிலாக, தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, ஆயுள் தண்டனை கைதியை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக 7 கேள்விகளை எழுப்பி, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.
அனைத்து மாநில அரசுகளும் ஆயுள் தண்டனை கைதியை முன் கூட்டியே விடுதலை செய்வதற்கு தடை விதித்து 2014 ஜூலை 9-ம் தேதி அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது.
பின்னர், இந்த உத்தரவை 2015 ஜூலை 23-ம் தேதி மாற்றியமைத்து உத்தரவிட்டது. அதன்படி, வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்க வேண்டும் என்று தீர்ப்பு அளிக்கப் பட்டாலோ, 20 அல்லது 25 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டாலோ, சிபிஐ விசாரித்தாலோ அந்த வழக்குகளில் மாநில அரசு தாமாக முன்வந்து தண்டனை குறைப்பு செய்ய முடியாது என்று 7 கேள்விகளுக்கும் பதில் அளித்து, இவ்வழக்கை மீண்டும் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, நளினியை தமிழக அரசால் விடுவிக்க முடியாது.
தள்ளுபடி செய்ய வேண்டும்
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நளினி தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி வருகின்றனர். இந்த வழக்கில் இன்னமும் முடிவு எடுக்கப்படாததால், முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் நளினியின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தொடர்ந்த வழக்கு, வரும் 27-ம் தேதி (திங்கள்கிழமை) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழக அரசு மேற்கண்ட பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT