Published : 27 Jul 2016 02:27 PM
Last Updated : 27 Jul 2016 02:27 PM

திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்ட துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை நகரில் அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட், திண்டிவனம் சாலை ரயில்வே கேட், விழுப்புரம் சாலை ரயில்வே கேட் என்று 3 ரயில்வே கேட்கள் உள்ளன. அதில், திண்டிவனம் சாலை ‘ரயில்வே கேட்’ பரபரப்பாக இயங்கக் கூடியது. சென்னை, வந்தவாசி, மேல்மருவத்தூர், செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரிக்கு செல்லும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் திண்டிவனம் சாலை ரயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டும். ரயில்கள் செல்லும் போது 10 நிமிடங்களுக்கு மேலாக ‘கேட்’ மூடப்படும். அப்போது, இரு திசைகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும். ‘கேட்’ மீண்டும் திறக்கப்பட்டதும் முந்திச் செல்ல முயலும் வாகனங் களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விழுப்புரம் - திருப்பதி பாசஞ்சர் மற்றும் திருப்பதி - ராமேஸ்வரம் ரயில்களுக்காக மாலை 5.55 மணியளவில் ‘ரயில்வே கேட்’ மூடப்படும். தி.மலை ரயில் நிலையத்தை பாசஞ்சர் ரயில் சென்றடைந்ததும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள ராமேஸ்வரம் விரைவு ரயில் புறப்பட்டுச் செல்லும். இதனால், 20 நிமிடங்கள் வரை ‘ரயில்வே கேட்’ மூடப்பட்டிருக்கும். அப் போது, இரு திசைகளிலும் 500 மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுக்கும். இதனால், பிரதான சந்திப்பான பெரியார் சிலை சந்திப்பில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. சொற்ப எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படுவதால், போக்குவரத்து பாதிப்பு குறைவாக உள்ளது. எதிர்காலத்தில் கூடுதலாக ரயில்கள் இயக்கப்படும்போது பாதிப்பு கடுமையாக இருக்கும் என்பதால், ரயில்வே மேம்பாலம் கட்டவேண்டும் என்று நகர மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, “திண்டிவனம் சாலையில் ரயில்வே கேட் அமைந் துள்ள பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்துகிறோம்.

அதன்படி, மேம்பாலம் கட்டிக் கொடுக்கப்படும் என்று கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதையடுத்து, 15 இடங்களில் மண் பரிசோதனை செய்யப்பட்டது. திண்டிவனம் சாலை, திருவண்ணாமலை சாலை, திருக்கோவிலூர் சாலையை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டுவது என்று திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் முழுவீச்சில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களது வேகம் அப்போதே குறைந்துவிட்டது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக, மேம்பாலம் கட்டும் நடவடிக்கையில் ஆர்வம் காட்டவில்லை.

பவுர்ணமி கிரிவலம் செல்லும் நாட்களில் மிகவும் சிரமப் படுகிறோம். எனவே, ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியைத் தொடங்க முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x