Published : 29 Apr 2017 08:41 AM
Last Updated : 29 Apr 2017 08:41 AM

வீட்டை காலி செய்வதாக கூறி ரூ. 30 லட்சம் மோசடி: அமைச்சர் காமராஜ் மீது வழக்கு- தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் ரூ.30 லட்சம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக அளித்த புகாரின் பேரில், அவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இல்லாவிடில், சிபிஐ விசாரணை நடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிமுகவில் தற்போது நிலவிவரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீதான இந்த மோசடி வழக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புகார் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள கீழவாழாச்சேரியைச் சேர்ந்த சிவஞானம் மகன் எஸ்.வி.எஸ்.குமார். ஒப்பந்ததாரரான இவர், அமைச்சர் ஆர்.காமராஜ் மீது கடந்த 3.4.2015-ல் மன்னார்குடி டிஎஸ்பி அறிவானந்தத்திடம் புகார் மனு அளித்தார்.

மிரட்டிய அமைச்சர்

அதில், ‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை மந்தைவெளி சிருங்கேரி மடத்து தெரு பகுதியில் ஒரு வீட்டை நான் விலைக்கு வாங்கினேன். வீட்டை விற்றவர் 6 மாதத்தில் வீட்டைக் காலி செய்து தருவதாகக் கூறினார். ஆனால், சொன்னபடி காலி செய்யவில்லை. அதனால், அமைச்சர் ஆர்.காமராஜின் மைத்துனர் ராமகிருஷ்ணனிடம் இதுகுறித்து நான் தெரிவித்தேன். அவர், வீட்டை காலிசெய்து தருவதாக உறுதியளித்தார். அதற்காக 4 தவணையாக ரூ.30 லட்சம் பணத்தை என்னிடம் வாங்கிக்கொண்டார். பணம் வாங்கியபோது, அமைச்சர் ஆர்.காமராஜ் உடனிருந்தார். ஆனால், சொன்னபடி வீட்டை காலி செய்து தரவில்லை. அதன்பின்னர் கொடுத்த தொகையை எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிடுங்கள் என்று நான் தொடர்ந்து கேட்டபோது, என்னிடம் ரூ.30 லட்சம் கடன் வாங்கிக்கொண்ட தைப்போல கடந்த 22.11.2014-ல் புரோ நோட்டு எழுதிக் கொடுத்தனர். அதன்பிறகு பணத்தை கேட்டால் அலட்சியப்படுத்தி, மிரட்டினர்’ என புகாரில் கூறியிருந்தார்.

அந்த புகார் மனு மீது, மன்னார்குடி காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.எஸ். குமார் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் மன்னார்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் குமார் நேரில் ஆஜராகி, போலீஸாரிடம் தனது புகாரை தெரிவிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் போலீஸார் விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், உத்தரவுப்படி குமார் ஆஜராகவில்லை.

தமிழக அரசுக்கு எச்சரிக்கை

அச்சத்தின் காரணமாகவே ஆஜராக வில்லை என்று கூறி, எஸ்.வி.எஸ். குமார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில், அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பண மோசடி புகாரின் பேரில் தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால் சிபிஐ விசாரணை நடத்த நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x