Published : 12 Apr 2014 10:28 AM
Last Updated : 12 Apr 2014 10:28 AM

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி ஒதுக்கீடு: டி.எஸ்.பி.பணியை தேர்வுசெய்தார் முஸ்லிம் பெண் இன்ஜினீயர்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் தேர்வானவர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முதலிடத்தை பிடித்த டீனா குமாரி, 2-ம் இடம் பெற்ற கீதா பிரியா ஆகியோர் துணை ஆட்சியர் பணியையும், 3-ம் இடத்தைப் பிடித்த ரேஷ்மி, வணிக வரி உதவி ஆணையர் பதவியையும் தேர்வுசெய்தனர்.

குரூப் 1 தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்து பெண்கள் சாதனை படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண் இன்ஜினீயர் ஷாஜீதா, டிஎஸ்பி பணியை தேர்வு செய்தார்.

துணை ஆட்சியர், போலீஸ் டிஎஸ்பி, வணிக வரிகள் உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 25 காலியிடங் களை நிரப்ப கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்நிலைத்தேர்வு நடத்தப்பட்டது.

மொத்தம் 75,629 பட்டதாரிகள் தேர்வு எழுதியதில் 1,153 பேர் முதன்மை தேர்வுக்கு தேர்வுசெய்யப்பட்டனர்.

முதன்மை தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் வெற்றிபெற்ற 60 பேர் நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். இறுதியாக 25பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு கடந்த வாரம் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்பட்டது.

முதல் 3 இடங்களை பிடித்த பெண்கள்

குரூப்-1 தேர்வில் 623 மதிப்பெண் பெற்று நெய்வேலி இன்ஜினீயர் பி.டீனாகுமாரி முதலிடத்தையும், 612 மதிப்பெண் எடுத்து உடுமலைப்பேட்டையை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி பி.கீதா பிரியா 2-ம் இடத்தையும், 593 மதிப்பெண் பெற்று கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.ஏ. பட்டதாரி பி.ஆர்.ரேஷ்மி 3-ம் இடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.

தேர்வில் வெற்றிபெற்றவர்கள் தங்களுக்கு விருப்பமான பணியை தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்தது.

டிஎஸ்பி பதவியை தேர்வுசெய்த முஸ்லிம் பெண்

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்த மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த பெண் இன்ஜினீயர் ஷாஜீதா, டிஎஸ்பி பணியை விரும்பி தேர்ந்தெடுத்தார்.

அவர்களைத் தொடர்ந்து மற்றவர்களும் ரேங்க் படி ஒவ்வொருவராக கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு விருப்பமான பணியை தேர்வுசெய்தனர்.

அவர்கள் அனைவருக்கும் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். தற்போது ஒதுக்கீட்டு ஆணை பெற்ற அனைவருக்கும் சம்பந்தப்பட்ட துறையின் தலைமையகத்தில் இருந்து விரைவில் பணிநியமன ஆணை வழங்கப்படும்.

உறுப்பினர்கள் பங்கேற்பு

பணிஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் ஜி.செல்வமணி, டாக்டர் எஸ்.பன்னீர்செல்வம், ஜி.சண்முக முருகன், டி.குப்புசாமி மற்றும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x