Published : 04 May 2017 11:42 AM
Last Updated : 04 May 2017 11:42 AM

கடும் வறட்சியில் ‘கை’ கொடுக்கும் காடு வளர்ப்புத் திட்டம்: முறையாக பராமரித்தால் மழை வளம் பெருக வாய்ப்பு

தமிழக வனத்துறை அறிமுகம் செய்த, தனியார் பட்டா நிலங்களில் காடு வளர்ப்பு திட்டத்தை சரிவர முறைப்படுத்தியிருந்தால், கடும் வறட்சி நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. வருங்காலத்திலும் அரசு அளிக்கும் மரக்கன்றுகளை முறையாக பாதுகாத்து வளர்த்தால், மழை வளம் பெருக ஏதுவாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2001-ம் ஆண்டு பசுமையாக்கல் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் காடு வளர்ப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தனியார் பட்டா நிலங்களில் ஒரு ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வீதம் இலவசமாக நாற்றங்காலை வன விரிவாக்க திட்டம் மூலம் வழங்கப்பட்டது. இதன் மூலம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரங்களில் இருந்து சிறு, குறு விவசாயிகள் வருவாய் ஈட்டலாம். இதற்காக வனத்துறை மூலம் பீயன், நாட்டு வேம்பு, மலை வேம்பு, தேக்கு உள்ளிட்ட மரங்கன்றுகளை ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் அளித்து. இதனை விவசாயிகள் பெற்று நிலங்களில் வளர்த்தாலும், முறையாக பராமரிக்காததால், பல நாற்றங்கால்கள் பட்டுப்போனது

தமிழகத்தில் காடுகளின் பரப்பு 19 சதவீதமாக இருக்கும் நிலையில், காடுகளின் பரப்பை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜப்பான் நாட்டு உதவியுடன், காடு களில் மரக்கன்றுகளை நடும் திட்ட மும், காடுகளை சார்ந்துள்ள பழங்குடி யினர், தொழில்கள் செய்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எடுக்கப்பட்ட முடிவும் எவ்வித பலனும் அளிக்கவில்லை.

வனத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பல லட்சம் மரக்கன்றுகள் ஆண்டு தோறும் நடும் திட்டம் தொடங்கப்படுகிறது. கோடை வறட்சியைப் போக்க விதை பந்துகளை காடுகளில் வீசுவது முதல் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் காடுகளில் மரக்கன்று நடுவது வரையிலான திட்டங்கள் உரிய பலன் அளிக்காத திட்டமாகவே இருப்பதால், வறட்சியே மிஞ்சி நிற்கிறது.

அரசு செயல்படுத்தும் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் தனியார் பட்டா நிலங் களில் காடு வளர்ப்பு திட்டத்துக்காக அளிக்கப்பட்ட மரக்கன்றுகளை விவ சாயிகள் முறையாக பராமரித்து இருந்தால், தற்போது, கடும் வறட்சி நிலை ஏற்பட்டு இருக்காது. அரசு வழங்கும் நல்ல திட்டங்களை விவசாயி கள் பயன்படுத்தி, அதனை பராமரிப்பது அவசியம் என சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வனத்துறை சேலம் சித்தர் கோயில் வன விரிவாக்க ரேஞ்சர் கருப்பையா கூறியது:

கடந்த 2001-ம் ஆண்டு முதல் தனியார் நிலங்களில் காடு வளர்ப்பு திட்டம் மூலம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறோம். இதன் மூலம் நடப்பாண்டு வரை 15 லட்சம் மரக்கன்றுகளை வழங்கியிருக் கிறோம். இந்த மரக்கன்றுகளை விவசாயிகள் முறையாக பராமரிப் பதன் மூலம் மரம் பெருகிட மழை பெருகியிருக்கும். குறைந்த கால மரக்கன்றுகளை பெற்றுச் செல்லும் விவசாயிகள் அதன் மூலம் வருமானத்தை ஈட்டவும் வாய்ப்பாக இருக்கும்.

மேலும், நாங்கள் அளிக்கும் மரக்கன்று களை வெட்ட விஏஓ அனுமதியைத் தவிர வேறு எதுவும் தேவைப்படாது. ஆண்டு தோறும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நாற்றங்கால் மூலம் வளர்த்து, விவசாயிகளுக்கு அளித்து வருகிறோம். இதனை விவசாயிகள் பயன்படுத்தி, காடு வளர்ப்பின் மூலம் ஆர்வம் காட்டுவதால், பருவநிலை மாறுபாட்டால் வருங்காலத்தில் கவலைப்பட தேவையிருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x