Published : 17 Nov 2014 09:04 AM
Last Updated : 17 Nov 2014 09:04 AM

ரவுடி, கொலையாளிகளின் கூடாரமாகிறதா மதுரை திமுக?- மிரள வைக்கும் பின்னணி தகவல்கள்

“செயலற்ற ஜெயலலிதா ஆட்சியில் ரவுடிகளின் கூடாரமாகிறது தமிழ்நாடு’ என்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. ஆனால், மதுரை திமுக-வில் ரவுடிகளும் கொலைக் குற்றவாளிகளும் முக்கியப் பதவிகளில் அமர்த்தி அழகுபார்க்கப்படுவதாக திமுக-வினரே ஆதங்கப்படுகிறார்கள்.

ஒரு காலத்தில் மதுரை திமுக-வில் மு.க.அழகிரியைச் சுற்றி அதிரடிப் பேர்வழிகள் அதிகம் இருந்தார்கள். அவர்களே மதுரை திமுக-வையும் அழகிரியின் பெயரையும் கெடுத்துக் கொண் டிருந்தார்கள். இதையெல்லாம் அழகிரி கண்டும் காணாமல் இருந்ததால் அவரையே கொலை வழக்கிலும் சிக்க வைத்தார்கள். நிலைமை கைமீறிப் போனதால், வழக்கிலிருந்து வெளியில் வந்த பிறகும் அழகிரியால் அதிரடிப் பேர்வழிகளை விலக்கிவைக்க முடியவில்லை.

அதேசமயம், அழகிரி - ஸ்டாலின் மனக்கசப்பைத் தொடர்ந்து, அதிரடிப் படையிலிருந்த சிலர் அழகிரியை பகைத்துக் கொண்டு ஸ்டாலின் பக்கம் தாவினார்கள். இவர்கள், அழகிரி கோஷ்டியை சமாளிப்பதற்காகவும் அழகிரி யையே மிரட்டுவதற்காகவும் தங் களுக்கு கேடயமாகப் பயன் படுத்துவதற்காகவும் ரவுடிகளை யும், கொலை வழக்குகளில் சிக்கியவர்களையும் முக்கியப் பதவிகளுக்கு சிபாரிசு செய்தார் கள். விளைவு, இப்போது மதுரை திமுக-வில் பல முக்கியப் பதவி கள் கிரிமினல்கள் கையில்!

இதுகுறித்து ’தி இந்து’விடம் கவலையுடன் பேசிய மதுரையின் மூத்த திமுக பொறுப்பாளர்கள் கூறியதாவது: செப்டம்பர் 21-ம் தேதி முரசொலியில் தமிழக சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்ட தலைவர் கலைஞர், கூலிப்படையைச் சேர்ந்த மதுரை அப்பள ராஜாவைப் பற்றி யும் தெளிவாகக் குறிப்பிட்டிருந் தார். ஆனால், அந்த அப்பள ராஜாதான் மதுரை 9-ம் பகுதி திமுக இளைஞரணி அமைப்பாள ராக இருக்கிறார் என்பதை தலை வருக்கு யார் சொல்வது?

பல்வேறு வழக்குகளில் சம் பந்தப்பட்டுள்ள அப்பள ராஜாவின் தூண்டுதலால், நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பழங்காநத்தம் நேருநகர் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் ஆண்டியப்பன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இப்போது வேலூர் சிறையில் இருக்கிறார் அப்பள ராஜா (ஆனால், இன்றுவரை பதவியில் நீடிக்கிறார் அப்பள ராஜா). இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கண்ணன் என்பவருக்கு இப் போது வட்டச் செயலாளர் பதவி கொடுத்திருக்கிறார்கள். இதே போல்தான், குற்றப் பின்னணி உடைய சோலை ரவியை மதுரை மாநகர் மாவட்ட தொண்டரணி அமைப்பாளராக நியமித்திருக்கிறார்கள்.

கீரைத்துறை வி.கே.குருசாமி திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர். இவரது மருமகன் முகேஷ் சர்மா மாநகர் மாவட்ட திமுக மாணவரணி செயலாளராக இருக்கிறார். கடந்த செப்டம்பர் 18-ம் தேதி இரவு, ஒன்றாம் பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளர் முத்துப்பாண்டியை முகேஷ் சர்மா கோஷ்டி வெட்டிக் கொலை செய்தது. இதற்காக சர்மா இப்போது சிறையில் இருக்கிறார். அதே தினத்தில், 2-ம் பகுதி திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் கருணாநிதியை ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. ஆனால், கருணாநிதி தப்பிக்க, திமுக பந்தல் அமைப்பாளர் கருப் பையாவை வெட்டிக் கொன்றது அந்தக் கும்பல். இந்தக் கொலை யில் ஈடுபட்டது 2-ம் பகுதி திமுக இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன் கோஷ்டி. இப்போது நவநீதகிருஷ் ணனும் சிறையில் இருக்கிறார்.

இந்த 2 கொலைகளும் நடந்த மறுநாள் ஜெய்ஹிந்த்புரத் தில் ஒரே அறைக்குள் திமுக தொண்டர்கள் 3 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த மூவருமே அப்பள ராஜா கூட்டாளிகள். இவர்களை கொலை செய்ததும் திமுக பிரமுகரான ’கவாத்து’ திருப்பதியும் அவரது ஆட்களும்தான். திருப்பதி இப் போது உள்ளே இருக்கிறார். இப் போது மதுரை திமுக-வில் உள்ள முக்கியப் பொறுப்பாளர்களின் பின் னணி இப்படித்தான் இருக்கிறது.

இது மாத்திரமல்ல.. அடுத்த கட்டமாக பகுதிச் செயலாளர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கு மோதிக் கொண்டிருப்பவர்களிலும் கொலைக் குற்றவாளிகளும் கிரிமினல்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் பதவிக்கு வந்து இவர்களைக் கூட்டிக் கொண்டு தேர்தல் நேரத்தில் எப்படி மக்களை சந்திப்பது என்பதுதான் எங்களது கவலை.

குற்றப் பின்னணி உள்ளவர்கள் எல்லாம் பதவிகளுக்கு வருவதைப் பார்த்துவிட்டு கட்சியின் மூத்த தலைகள் எல்லாம் மிரண்டு போய் ஒதுங்க ஆரம்பித்துவிட்டார்கள். அதேசமயம் குற்றப் பின்னணி உள்ள திமுக பொறுப்பாளர்களை எல்லாம் கண்ணில் விளக்கெண் ணெய் ஊற்றிக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது போலீஸ். மேலே இருந்து உத்தரவு வந்தால், அடுத்த நிமிடமே இவர்கள் மீது வழக்குகளைப் போட்டு உள்ளே தள்ளிவிட்டு ‘திமுக ரவுடிகள் கைது’ என செய்தி பரப்பி திமுக-வை களங்கப்படுத்தத் தயாராய் இருக்கிறார்கள். நவம்பர் 20, 22 தேதிகளில் மதுரை நேர்காணலுக்கு வரும் ஸ்டாலின் மதுரை திமுக-வின் உண்மை நிலையைக் கண் டறிந்து தகுதியான நபர்களை பொறுப்புகளில் நியமிக்க வேண் டும். இல்லாவிட்டால் விபரீதங்கள் தவிர்க்க முடியாததாகிவிடும்’’ இவ்வாறு அந்தப் பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x