Published : 07 Feb 2017 09:05 AM
Last Updated : 07 Feb 2017 09:05 AM

சசிகலா பதவியேற்பு விழா: சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் தயார்

சசிகலாவின் முதல்வர் பதவியேற்பு விழாவுக்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் தயாராகிறது.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத் தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். முன்ன தாக, முதல்வர் பதவியை ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். தன் தலைமையிலான அமைச்சரவையும் ராஜினாமா செய்வதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்.

இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரை சந்தித்து சசிகலா ஆட்சியமைக்க உரிமை கோருவார். அதன் பிறகு 9-ம் தேதி முதல்வராக சசிகலா பதவியேற்பார். பதவியேற்பு எளிமையான விழாவாக ஆளுநர் மாளிகையில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், நேற்று காலை போயஸ் தோட்டத்துக்கு வந்து சசிகலாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தை திடீரென பார்வை யிட்டனர். இதையடுத்து, நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடக்கப்போவது உறுதியானது. அமைச்சர்கள் பார்வையிட்டு சென் றதும், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் வந்தனர். அரங்குக்குள் சென்று, பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்ச்சி ஏற்பாடுகள், மேடை அமைப்பு ஆகியவை தொடர்பாக, ஆலோசனை நடத்தினர்.

பணிகள் மும்முரம்

இதைத்தொடர்ந்து, மேடை அலங்கார பணிகள், நூற்றாண்டு விழா அரங்கை சுத்தப்படுத்தும் பணிகள், சுற்றியுள்ள பகுதிகளை தூய்மைப் படுத்தும் பணிகள் ஆரம்பித்தன. அப்போது, சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், அப்பணிகளை பார்வையிட்டுச் சென்றார். தொடர்ந்து, வாலாஜா சாலையில், நடுவில் உடைந்த நிலையில் இருந்த ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ தடுப்புகள் அகற்றப்பட்டு லாரியில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. சாலை தடுப்பில் இருந்த காய்ந்த செடிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

இது தொடர்பாக பணியில் ஈடு பட்டிருந்த அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘எங்களுக்கு அரங்கை அலங்கரிக்கவும், சுத்தம் செய்யவும் உத்தரவு வந்தது. தயாராக வைத் திருக்க வேண்டும். எப்போது வேண்டு மானாலும் பதவியேற்பு விழா நடக்கும் என்றும் மேலிடத்தில் இருந்து கூறப்பட்டுள்ளது’’ என்றனர்.

போலீஸ் குவிப்பு

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், சசிகலா பதவியேற்புக்கான ஏற்பாடுகள் நடப்பதை முன்னிட்டு, அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x