Published : 06 Dec 2013 05:41 PM
Last Updated : 06 Dec 2013 05:41 PM

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு விஜயகாந்த் சவால்

தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தைரியமிருந்தால் தங்கள் பதவியை ராஜிநாமா செய்யட்டும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் சவால் விடுத்துள்ளார்.

பொன்னேரியில் இன்று தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் சார்பில், 14 ஏழை ஜோடிகளுக்கு இலவசத் திருமணத்தை நடத்திவைத்து அவர் மேற்கண்டவாறு பேசினார்.

விழாவின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த், "தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க., போட்டியிட்டது. இதில், கட்சிக்கு வெற்றி முக்கியம் அல்ல. தமிழர்களின் நலன் காக்கத்தான் எங்கள் கட்சி போட்டியிட்டது.

எங்கள் கட்சி சார்பில் மாநாடு நடத்திய பிறகே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். முள்ளிவாய்க்கால் போரின் போது ஆட்சியில் இருந்த கருணாநிதியும், முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த ஜெயலலிதாவும், இலங்கை தமிழர் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகின்றனர்" என்றார்.

தேமுதிக கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்ற புகார் குறித்து கேட்டதற்கு, "மக்களை ஏமாற்றும் அரசியல் நடந்து வருகிறது. எங்கள் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்கு போனால் கூட என்ன தீர்மானம் நிறைவேற்ற முடியும்? ஆனால் தொகுதி மக்களை நாங்கள் நன்றாக பார்த்துக் கொள்கிறோம்" என்றார் விஜயகாந்த்.

தே.மு.தி.க.வில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் மீது இதுவரை கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்த கேள்விக்கு, "இது கட்சி விவகாரம். அதுபற்றி உங்களிடம் (செய்தியாளர்கள்) சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

தேமுதிகவை விட்டு விலகி சென்ற எம்.எல்.ஏ. ஒருவர் தைரியம் இருந்தால் தங்களை விஜயகாந்த் நீக்கிப் பார்க்கட்டும் என்று கூறியுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, "முதலில் அவர்களை தைரியம் இருந்தால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய சொல்லுங்கள்" என்றார் விஜயகாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x