Published : 28 Feb 2014 11:05 AM
Last Updated : 28 Feb 2014 11:05 AM

தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 12% ஊதிய உயர்வு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அரசு அறிவித்த அகவிலைப்படியினை அவர்களுக்கும் வழங்கிட ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேற்படி கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், தங்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டு, 31.3.2013 உடன் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டதால், ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர்.

இவர்களது கோரிக்கையை ஏற்று, புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்கப்பட்டது. இந்தக் குழுதற்போது தனது பரிந்துரையை அரசுக்கு அளித்துள்ளது.

இந்தக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வினை வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இதன்படி, தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நிகர லாபத்தில் செயல்பட்டு வருவதோடு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து எந்த நிதியுதவியும் பெறாமல் சொந்த நிதியிலிருந்து செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 12 விழுக்காடு ஊதிய உயர்வு 1.4.2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும்.

மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நிகர லாபத்தில் இயங்கி, சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கூட்டுறவு சங்க விதிகளின்படி உச்சபட்சமான 14 விழுக்காடு ஈவுத்தொகையை தொடர்ந்து வழங்கி வரும் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கூடுதலாக ஓர் ஊதிய உயர்வு ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து நிதியுதவி பெற்று தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நிகர லாபத்தில் இயங்கி வரும் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 10 விழுக்காடு ஊதிய உயர்வு 1.4.2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும்.

சில ஆண்டுகள் லாபம் ஈட்டி, குவிந்த நட்டத்துடன் செயல்படும் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7 விழுக்காடு ஊதிய உயர்வு 1.4.2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும்.

நடப்பு மற்றும் குவிந்த நட்டத்தில் செயல்படும் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 5 விழுக்காடு ஊதிய உயர்வு 1.4.2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத் தொகை ரொக்கமாக வழங்கப்படும்.

ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்குக் கீழ் கடன் நிலுவையிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு, இச்சங்கங்களின் கடன் நிலுவை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்த பின்னர் 5 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

தற்போது வழங்கப்படும் அடிப்படையில் அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த ஊதிய உயர்வு மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், குறைந்த பட்சம் 558 ரூபாயும், அதிக பட்சம் 5,661 ரூபாயும் ஊதிய உயர்வு பெறுவர். இதனால் 26 கோடியே 89 லட்சம் ரூபாய் அளவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ஆண்டு தோறும் கூடுதல் செலவினம் ஏற்படும்.". இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x