Last Updated : 15 Jun, 2016 08:01 AM

 

Published : 15 Jun 2016 08:01 AM
Last Updated : 15 Jun 2016 08:01 AM

ம.பி-யில் சென்னை மாணவர் ஆற்றில் மூழ்கி இறந்த விவகாரம்: சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித் துறைக்கு தமிழக அரசு உத்தரவு

மத்தியப்பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிக்காக சென்று நர்மதை ஆற்றில் மூழ்கி சென்னை மாணவர் இறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நட வடிக்கை எடுக்க கல்வித் துறைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில், 17வயதுக்கு உட்பட் டோருக்கான, 61-வது அகில இந்திய பள்ளி கிரிக்கெட் போட்டி, மே 30 முதல் ஜூன் 4 வரை நடந்தது. இதில், 21 மாநில அணிகள் பங்கேற்றன.

இந்தப் போட்டியில் பங்கேற்க, சென்னையைச் சேர்ந்த 16 மாணவர் களைக் கொண்ட தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்டு, இந்தூர் சென்றது. இதில், 10-க்கும் மேற்பட்டோர் தனியார் மெட்ரிக் பள்ளிகளின் மாணவர்கள், தி.நகர் சி.பி. நாயகம் மெட்ரிக் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் தங்கமணி, அணி மேலாளராகச் சென்றார்.

போட்டிகள் முடிந்து புறப்படும் நாளான ஜூன் 5-ம் தேதி, அணி மேலாளர் தங்கமணி, 4 மாணவர் களை மட்டும் அழைத்துக் கொண்டு, அங்கிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள நர்மதை நதிக் கரையில் உள்ள பிரகதீஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளார். அங்கு, நர்மதை ஆற்றில் குளித்த போது, ஏவி.எம். ராஜேஸ்வரி பள்ளியைச் சேர்ந்த  கல்யாண ராமன் என்ற 9-ம் வகுப்பு மாணவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். 3 நாட்களுக்கு பின்னரே அவரது சடலம் கிடைத் துள்ளது.

இதையடுத்து, கல்யாணராம னின் தந்தை, தாய், அண்ணன், பெரியப்பா ஆகிய நால்வரை மட்டும் இந்தூருக்கு வரவழைத்த, தமிழக கல்வித் துறை அதிகாரிகள், பெற்றோரை சமாதானப்படுத்தி, மாணவரின் உடலை அங்கேயே தகனம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்தசம்பவம், ஆசிரியர்களிடையே கொந் தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

அகில இந்திய போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாடு அணிக்கு, மாநிலம் முழுவதிலும் இருந்து திற மையான வீரர்களை தேர்வு செய் யாமல், சென்னை மாணவர்களை மட்டும் தேர்வு செய்து, அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களில் பெரும் பாலோர் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள். உடன் சென்றவரும் தனியார் பள்ளியைச் சேர்ந்தவர்.

அணிக்கு ஒரு பயிற்சியாளர், ஒரு மேலாளர் செல்ல வேண் டும் என்ற விதியும் கடைபிடிக் கப்படவில்லை. உள்ளூரில் உள்ள பூங்காவுக்கு அழைத்துச் செல் லவே நிறைய விதிமுறைகள் உள்ளன. நீர்நிலைகள் உள்ளிட்ட ஆபத்தான இடங்களுக்கோ, வேறு எந்த சாகச நிகழ்ச்சிக்கோ பார்வையாளராகக் கூட மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்லக் கூடாது என விதிகள் உள்ளன.

ஆனால், இவர்கள் எந்த விதிமுறைகளையும் கடைபிடிக் காமல், ஒரு மாணவனை பறி கொடுத்துவிட்டு வந்து நிற்கின்ற னர். இனிமேல், அடுத்தடுத்த மாவட்டங்களில் நடக்கிற விளை யாட்டுகளுக்குக் கூட பள்ளிக் கல்வித் துறையை நம்பி எப்படி குழந்தைகளை அனுப்ப முடியும்? கல்வித் துறையின் உயர் அலுவலர்களே தலையிட்டு இந்த விஷயம் வெளியே வராமல் செய்துள்ளனர். இதில் ரகசியம் காக்க வேண்டிய அவசியம் என்ன? இதன் மூலம் வரும் காலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழக முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பீட்டர் சுப்பா ராவ், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனிதா, உடற்கல்வி ஆசிரியர் தங்கமணி ஆகியோருக்கு இந்த அணித் தேர்வில் நேரடித் தொடர்பு உள் ளது.

இந்தப் பிரச்சினை, ஆசிரியர் கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற போட்டிகளுக்கு அணிகளை தேர்வு செய்வதில் பெருமளவு ஊழல்களும், விதி மீறல்களும் நடைபெறுகின்றன. இது, தற் போதைய இவர்களின் செயல் கள் மூலம் அப்பட்டமாக வெளிப் படுகிறது.

இனியும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், இதுகுறித்து முழுமையான, வெளிப்படையான விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பனிடம் கேட்டபோது, ‘‘தனியார் பள்ளி மாணவர் இந்த சம்பவத்தில் இறந்துள்ளது தொடர்பாக கல்வித் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x