Published : 05 Nov 2013 04:46 PM
Last Updated : 05 Nov 2013 04:46 PM

தமிழக மீனவர்கள் 30 பேர் சிறைபிடிப்பு; இருவர் மாயம்





ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சார்ந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது. மேலும் இருவரின் நிலை தெரியவில்லை.

இதன் தொடர்ச்சியாக, ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து திங்கள்கிழமை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படை மீனவர்களின் விசைப்படகுகளை சேதப்படுத்தி, வலைகளை அறுத்து கடலில் எறிந்தனர்.

இதில், ஆரோக்கியராஜ், பிரியன், வினோதன், கிளாத்தீஸ், ஆப்ரஹாம் உள்ளிட்ட 13 ராமேஸ்வரம் தீவு மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து 3 விசைப் படகுகளைக் கைப்பற்றினர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து திங்கட்கிழமை 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில் கோடியக்கரை இந்திய எல்லைப் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அத்துமீறி இலங்கை எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி 17 மீனவர்களையும் அவர்களின் 4 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைப் பிடித்தது.

கச்சத்தீவு மற்றும் கோடியக்கரை பகுதிகளில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 30 மீனவர்களையும் காங்கேசன் துறையில் உள்ள கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீனவர்களை விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்று தெரிகின்றது.

இந்நிலையில் தனுஸ்கோடி அருகே திங்கட்கிழமை இரவு ஐந்தாம் தீடைப் பகுதியில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு அந்தோனி என்பவரின் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில் இருந்த 5 மீனவர்களில் மூன்று பேர் நீந்தி அருகே இருந்த மணற்தீடைகளில் கரை ஒதுங்கினர். இதில் கார்த்திக் மற்றும் சதிஷ் என்ற இரு மீனவர்களை காணவில்லை. காணாமல் போன இரண்டு மீனவர்களை தேடும் பணியில் கடலோரக் காவல்படையினரும், மீனவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர் பிரதிநிதிகள் கூட்டத்தில், இருநாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை விரைவில் நடத்த வேண்டும். இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களையும் அவர்களின் விசைப்படகுகளையும் விரைவில் விடுவிக்க வேண்டும். இந்திய சிறைகளில் உள்ள இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் பிரதிநிதிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x