Published : 26 Mar 2017 02:20 PM
Last Updated : 26 Mar 2017 02:20 PM

மன்னார்குடி அரசு அலுவலக வளாகத்தில் கழிவறை வசதி: 150 ஆண்டுகால பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், அரசு கருவூலம், தேர்தல் பிரிவு அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர்கள் சந்திப்புக்கூடம், மன்னார்குடி நகர, குற்றப்பிரிவு காவல் நிலையங்கள், முதலாவது மற்றும் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றங்கள் உட்பட 10 அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன.

இந்த அலுவலகங்களுக்கு மன்னார்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர். கழிப்பறை வசதி இல்லாததால் தவித்துவந்த பொதுமக்கள், இதுகுறித்து உரிய அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், மன்னார்குடியை அடுத்துள்ள ஆலங்கோட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் இளங்கோவன், மேற்கண்ட அலுவலகங்களுக்கு வந்து செல்லும் பொதுமக்களின் வசதிக்காக கழிப்பிடம் கட்டப்படுமா எனக் கேள்வி எழுப்பி கடந்த 17.2.2015 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்தார்.

அதன் தொடர்ச்சியாக பொதுப்பணித் துறை, கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களை அணுகி தொடர் முயற்சி மேற்கொண்டார். அதன் பலனாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கழிவறை கட்டப்பட்டுள்ளது. இது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படவுள்ளது.

கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த அலுவலக வளாகத்தில் மக்கள் படும் சிரமத்தைப் பார்த்தும், எந்த ஒரு அதிகாரியும் செய்துகொடுக்காததை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கேள்வி எழுப்பி அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் இளங்கோவன் கூறியது: வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களுக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மீண்டும் திருப்பித் தரலாம் என விதிமுறை இருந்தும், தராத அதிகாரிகளைக் கேள்வி கேட்டு சுமார் 400 பேருக்கு பணம் திருப்பித்தரப்பட்டது. வேகத்தடைகளில் வெள்ளை நிற பெயின்ட் அடிக்கச் செய்தது, இனிப்பகங்களில் தின் பண்டங்களை பாலித்தீன் பையில் ஸ்டாப்ளர் பின் அடிப்பதற்குப் பதிலாக ரப்பர் பேண்ட் போட்டுத்தரச் செய்தது என 90-க்கும் மேற்பட்ட பிரச்சினை களுக்கு தீர்வுகாண மிகப்பெரிய ஆயுதமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் எனக்கு உதவியுள்ளது. நுகர்வோர் ஒவ்வொருவரும் இந்தச் சட்டத்தை பயன்படுத்தி விழிப்புணர்வுடன் செயல்பட்டால் கையூட்டு கொடுக்காமல் அரசின் திட்டங்களை, மக்களின் கோரிக்கைகளை உரிமையுடன் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற நிலை உருவாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x