Last Updated : 09 Sep, 2016 08:55 AM

 

Published : 09 Sep 2016 08:55 AM
Last Updated : 09 Sep 2016 08:55 AM

உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி: வேட்பாளர்கள் வேட்டையில் பாஜக தீவிரம்

தமிழக உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் நிலையில், தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள பாஜக, வேட்பாளர்களை தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கி யுள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபரில் நடக்க உள்ளது. தேர்தல் அட்டவணை விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்படு கிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக உள்ளாட்சித் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தனித்தே போட்டியிட்டது.

காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து திமுக போட்டியிடும் எனக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த 3 மாதங்களாக தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு தலைவர் இல்லாததால் கூட்டணிப் பேச்சு இதுவரை தொடங்கவில்லை. கடந்த 2011 போல இப்போதும் தனித்தே போட்டியிடலாம் என்கின்றனர் திமுகவில் ஒரு தரப்பினர்.

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடு தலைச் சிறுத்தைகள் ஆகிய 4 கட்சி கள் கூட்டணி அமைத்து போட்டி யிடுவதாக அறிவித்துள்ளன. தேமுதிக, தமாகா தங்கள் நிலையை அறிவிக்கவில்லை.

இந்நிலையில், வரும் உள் ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

கடந்த 2011 உள்ளாட்சித் தேர் தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, நாகர்கோவில், மேட்டுப் பாளையம் ஆகிய 2 நகராட்சித் தலைவர் பதவிகளைக் கைப்பற் றியது. பேரூராட்சித் தலைவர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் தேர்தலிலும் கணிச மான இடங்களில் வெற்றி பெற்றது.

ஆனால், இந்த முறை மாநக ராட்சி மேயர், நகராட்சி, பேரூராட் சித் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பல கட்சிகள் உற்சாகம் இழந்துள்ளன.

தமிழகத்தில் 12,524 ஊராட்சித் தலைவர்கள், 99,333 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் கட்சி சார்பின்றி நடக்க உள்ளது. மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் 919, நகராட்சி வார்டு உறுப்பினர்கள் 3,613, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் 8,303, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 655, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 6,471 என 19,961 பதவிகளுக்கு அரசியல் கட்சி சின்னங்களின் அடிப்படையில் தேர்தல் நடக்க உள்ளது.

எனவே, முழு அளவில் போட் டியை எதிர்கொள்ள விரும்பும் கட்சிகள் சுமார் 20 ஆயிரம் வேட் பாளர்களை நிறுத்த வேண்டும். ஆனால், அதிமுக, திமுக தவிர மற்ற கட்சிகளுக்கு வாக்குச்சாவடி அளவில் கிளைகள் இல்லாததால் 20 ஆயிரம் வேட்பாளர்களை தேர்வு செய்வது கடினம்.

தனித்துப் போட்டியிடப் போவ தாக அறிவித்துவிட்ட பாஜக, 20 ஆயிரம் பேரை தேடும் முயற்சி யில் இறங்கியுள்ளது. இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘20 ஆயிரம் வேட் பாளர்களை அதிலும் 50 சதவீதம் பெண் வேட்பாளர்களைக் கண்டு பிடிப்பது பாஜகவுக்கு மிகவும் சிரமமான காரியம். மாநகராட்சி, நகராட்சி உறுப்பினர்களுக்குகூட வேட்பாளர்களை தேடிக் கண்டுபிடித்துவிடலாம். அவர் களை அதிமுக, திமுக விலைக்கு வாங்கும் அபாயம் உள்ளது’’ என்றார்.

உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்து ‘தி இந்து’விடம் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

மோடி அரசு சாதனை விளக்கி..

கூட்டணி பற்றி கவலைப் படாமல் தேர்தல் பணியில் இறங்கியுள்ளோம். மாவட்ட அளவில் பயிற்சி முகாம்கள் நடத்தியுள்ளோம். தேர்தல் பணி, வேட்பாளர் தேர்வுக்காக மாவட்டந்தோறும் 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வீடு, வீடாக விநியோகிக்கும் பிரச்சார இயக்கம் நடந்து வருகிறது. மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் இருந்தால் அதிமுக, திமுகவுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியிருப்போம். தேர் தல் நேர்மையாக, சுதந்திர மாக, அதிகார பலம், பணபலம், வன்முறையின்றி நடந்தால் பாஜக கணிசமான இடங்களில் வெல்வதோடு அதிமுக, திமுக வுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x