Published : 15 Sep 2016 08:35 AM
Last Updated : 15 Sep 2016 08:35 AM

எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கு: ஆயுள் தண்டனையை எதிர்த்து பானு உள்ளிட்ட 7 பேர் மேல்முறையீடு

எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் பானு உள்ளிட்ட 7 பேருக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எம்ஜிஆர் மறைவுக்குப்பிறகு அவருக்கு சொந்தமான ராமாவரம் தோட்டம் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விஜயன் உள்ளிட்டோர் நிர் வகித்து வந்தனர். இந்த சொத்து களை நிர்வகிப்பதில் விஜயனுக் கும், அவரது மனைவி சுதாவின் தங்கைகள் குடும்பத் தாருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2008 ஜூன் 4-ம் தேதி இரவு காரில் கோட்டூர்புரம் அருகே சென்று கொண்டிருந்த விஜயனை, ஒரு கும்பல் வழிமறித்து இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்தது. அபிராமபுரம் போலீஸார் விசாரித்து வந்த இந்த வழக்கு, பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

சிபிசிஐடி போலீஸாரின் விசா ரணையில், விஜயனைக் கொலை செய்தது சுதாவின் தங்கைகளில் ஒருவரான பானு என்பதும், அவர் போலீஸ்காரரான கருணா என்பவரின் உதவியுடன் கூலிப்படையினர் மூலமாக விஜயனை தீர்த்துக்கட்டியதும் அம்பலமானது.

இதையடுத்து, இந்த வழக்கில் பானு முதல் குற்றவாளியாகவும், பானுவுக்கு உதவிய போலீஸ்காரர் கருணா 2-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். தவிர விஜயனைக் கொலை செய்த சுரேஷ், ஆர்.கார்த்திக், தினேஷ்குமார், சாலமன், எம்.கார்த்திக், பள்ளி ஆசிரியை புவனா உள்ளிட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இதில் ஆசிரியை புவனா வெளிநாட்டுக்கு தப்பியதால், அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, எஞ்சிய 7 பேர் மீதான வழக்கு மட்டும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகள் 7 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பானுமதி உள்ளிட்ட ஏழு பேரும் மேல் முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x