Published : 16 Mar 2017 07:50 AM
Last Updated : 16 Mar 2017 07:50 AM
தனது வீடுகளில் சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தி அதன் மூலம் அரசுக்கு ரூ. 1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் குற்றப்பத்திரிகை நகல் பெற ஏப்ரல் 1-ம் தேதி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, கடந்த 2004-07 காலகட்டத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள வீடுகளில் சட்டவிரோத அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தியதாகவும், இந்த இணைப்பு களை சன் டிவிக்கு பயன்படுத்திய வகையில் அரசுக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய தாகவும் குற்றம் சாட்டப்பட்டது.பின்னர் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் காரணமாக இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொதுமேலாளர் எம்.பி.வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளராக இருந்த கவுதமன், சன் டிவி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது டெல்லி சிபிஐ போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீசியன் ரவி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுத மன் ஆகியோரை சிபிஐ அதிகாரி கள் கடந்த 2015- ஜனவரியில் சென்னையில் கைது செய்தனர். இவ்வழக்கில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டெல்லி சிபிஐ போலீஸார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ 14-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பாஸ்கர் முன்பு நடந்தது. அப்போது நீதிபதி, ‘‘வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தங்களுக்கு எதிரான குற்றப்பத்திரி கையைப் பெற ஏப்ரல் 1-ம் தேதி காலை 10.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT