Published : 20 Mar 2017 04:57 PM
Last Updated : 20 Mar 2017 04:57 PM

உளுந்தூர்பேட்டையில் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க ஆய்வு: அமைச்சர் அன்பழகன் தகவல்

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேரவையில் கூறினார்.

சட்டப்பேரவை இன்று கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கேள்வி நேரம் நடைபெற்றது.

அப்போது விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தொழில்நுட்பக் கல்லூரியும், அரசு கலைக்கல்லூரியும் அமைக்க வேண்டும் என்று அத்தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ குமரகுரு கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், ''கடந்த 5 வருடங்களில் தமிழகத்தில் 67 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கையில் இந்திய அளவில் தமிழகம் மாநிலமாகத் திகழ்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கெனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் என 30 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. உளுந்தூர்பேட்டையில் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும்'' என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x