Published : 30 Dec 2013 01:04 PM
Last Updated : 30 Dec 2013 01:04 PM

இலங்கை கடற்படையால் மேலும் 18 மீனவர்கள் சிறைப்பிடிப்பு

இலங்கை கடற்படையினரால் மேலும் 18 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இது, மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் பேசுவதாக, மீனவப் பிரதிநிதிகளிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.

பாம்பன் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மாலை நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்களில் சிலர் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துகொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் 18 மீனவர்களையும், அவர்களது 3 நாட்டுப் படகுகளையும் சிறைப்பிடித்துச் சென்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் கைது செய்யப்பட்ட மறுதினமே இலங்கை கடற்படையினர் மீண்டும் சிறைப்பிடிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்களிடம் பிரதமர் உறுதி

இதனிடையே, ராமநாதபுரம் மாவட்ட மீனவ பிரதிநிதிகள் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று நேரில் சந்தித்து பேசினர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறைகளில் உள்ள மீனவர்கள் அனைவரையும் விடுவிப்பதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்டுத் தருமாறு பிரதமரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று அவர்களிடம் உறுதியளித்த பிரதமர், இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, "இலங்கை சிறையில் வாடும் 213 தமிழக மீனவர்களையும், 77 விசைப்படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கையும், வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் சந்தித்து மனு கொடுத்தனர்.

அதேபோல தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்து மனு கொடுத்தோம். ஆனால், விடிவதற்குள் 22 பேர் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழி இல்லை" என்று மீனவர் சங்கத் தலைவர் குட்டியாண்டி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x