Published : 21 Jun 2016 12:18 PM
Last Updated : 21 Jun 2016 12:18 PM

மருத்துவ கல்வி இயக்குநர் திடீர் விசாரணை: லஞ்சத்தை தடுக்க மதுரை மருத்துவமனையில் பறக்கும் படை

மதுரை அரசு மருத்து வமனையில் கடந்த 2-ம் தேதி ரூ.300 லஞ்சம் கொடுக்க மறுத்ததால் சிகிச்சை தாமதமானதால் 18 வயது மாற்றுத் திறனாளி இளைஞர் உயிரிழந்தார்.

பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் சுகாதாரத் துறை செயலர் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து மருத்துவமனை போலீஸார் மருத்துவமனை ஊழியர், தற்காலிக ஊழியரை கைது செய்தனர். மருத்துவமனை டீன் எம்.ஆர்.வைரமுத்துராஜு சென்னைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று மருத்து வக் கல்வி இயக்குநர் டாக்டர் விமலா முன்னறிவிப்பின்றி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவர் லஞ்ச விவகாரத்தில் இளைஞர் இறந்த விவகாரம் தொடர்பாக டீன், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

மருத்துவமனை வார்டுகளில் நோயாளிகளிடம் நேரடியாக விசாரித்தார். மருத் துவக் கல்வி இயக்குநரின் இந்த திடீர் விசாரணையால் நேற்று மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, மருத்துவமனையில் சிகிச்சைக்கு லஞ்சம் கொடு த்தாலும், கேட்டாலும் அவர்களை கையும் களவுமாக பிடிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவமனை பேராசி ரியர்கள் 5 பேர், செவிலியர் கண்காணிப்பாளர் 10 பேர், 2 சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கண்காணிப்பு கேமரா, நோயாளிகள் புகாரின்பேரில் நேரடியாக சென்று நடவடிக்கை மேற்கொள்வர் என்றார்.

லஞ்சம் வாங்கிய 3 பேர் சிக்கினர்

மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா நேற்று ஆய்வு செய்ததால் மருத்துவமனையில் கண்காணிப்பு பலமாக இருந்தது. அப்போது நோயாளிகளிடம் சிகிச்சைக்கு பணம் கேட்ட ஒரு மருத்துவமனை பணியாளர், 2 இடைத்தரகர்கள் ஆகியோரை மருத்துவமனை நிர்வாகம் கையும்களவுமாக பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மருத்துவ கல்வி இயக்குநர் விசாரணை மேற்கொண்டு சென்றதால் விரைவில் நடவடிக்கை பாயும் என்பதால் மருத்துவமனை ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x