Published : 07 Jan 2014 02:22 PM
Last Updated : 07 Jan 2014 02:22 PM

ஊழலை அம்பலப்படுத்தியதால் கொலை மிரட்டல்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும், குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். வழக்கம்போல் நேற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

அப்போது, கணவன், மனைவி இருவரும் “ஊராட்சி மன்றத் தலைவரால் கொலைமிரட்டல்” என்று எழுதிய அட்டைகளை ஏந்தியபடி, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வராண்டாவில் வந்து அமர்ந்தனர். அந்த நபர் அய்யனேரி ஊராட்சிமன்றத்தில் உள்ள நான்காவது வார்டு உறுப்பினர் ரஜினி என்பதும் அவர்கள் தங்களின் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி, ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்திருப்பதும் தெரிய வந்தது.

இதுகுறித்து கவுன்சிலர் ரஜினி நிருபர்களிடம் கூறியதாவது:

“அய்யனேரி ஊராட்சிமன்ற தலைவராக உள்ள வேலாயுதம் என்பவர் அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார். நான் கேள்வி கேட்டதற்கு எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து, ஆட்சியர் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளரிடம் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புகார் அளித்தேன். ஆனால், போலீஸார் என் மீது பொய் வழக்கு போட்டு, என்னை கைது செய்தனர். ஊராட்சித் தலைவர் மீது நான் அளித்த புகார்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. என்னை குண்டர் சட்டத்தின் கீழ், கைது செய்யப் போவதாக ஆர்.கே.பேட்டை போலீஸார் என்னை மிரட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி நடந்த கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற போது, ஊராட்சித் தலைவரின் அடியாட்கள் என்னை கடுமையாக தாக்கினர். இதில் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். இத்தகவலை கேட்டு மனஉளைச்சல் அடைந்த எனது தாயார் இறந்து விட்டார். எனவே, எனக்கும் எனது மனைவிக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்”.

இவ்வாறு கவுன்சிலர் ரஜினி கூறினார்.

கவுன்சிலர் ரஜினி, ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்த தகவல் அறிந்து, திருவள்ளூர் டவுன் போலீஸார் விரைந்து வந்து அவரையும் அவரது மனைவியையும் அங்கிருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x