Published : 15 Apr 2017 09:03 PM
Last Updated : 15 Apr 2017 09:03 PM
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய ஏற்பாடு செய்யுமாறு பள்ளி கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
2011-ம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் தங்கள் கல்வித் தகுதிகளை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணையதளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனவே, கடந்த ஆண்டுகளை போலவே இந்த ஆண்டு (2017) அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு மேற்கொள்ளப்படுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நாளிலிருந்து 15 நாட்களுக்கு அந்தப் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளவும், அந்தந்த தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்ட நாளே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
2017-ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகு மாணவ, மாணவியர் அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு ஏதுவாக சென்ற ஆண்டு (2016) வழங்கிய அதே படிவங்களில் மாணவர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தயார் நிலையில் வைத்திருக்க தலைமையாசிர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT