Last Updated : 29 Jun, 2016 02:46 PM

 

Published : 29 Jun 2016 02:46 PM
Last Updated : 29 Jun 2016 02:46 PM

புதுவையில் சாராயக் கடை சூறை: எம்எல்ஏ உட்பட 50 பேர் கைது

புதுச்சேரி வழுதாவூர் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் அரசு சாராய கடையை மூடக் கோரி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்து தலைமையில் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது. மேலும் ராஜீவ்காந்தி சிக்னல் அருகில் திடீர் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ அசோக் ஆனந்து உட்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

வழுதாவூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கவுண்டம்பாளையம் சாராயக் கடை (எண்.6) கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இக்கடையால் அப்பகுதி மக்கள் கடுமையாக அவதிக்கு ஆளாகின்றனர். குடிமகன்களால் பெண்கள், மாணவர்கள், பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் குடித்து விட்டு வருவோரால் சாலை விபத்துகளும் ஏற்படுகின்றன. இக்கடையை நிரந்தரமாக மூடவேண்டும் என கடந்த என்ஆர் காங்கிரஸ் ஆட்சியிலேயே பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் மீண்டும் அந்த சாராயக் கடை ஏலம் விடப்பட்டு தொடர்ந்து அதே இடத்தில் இயங்கி வருகிறது.

சாராயக் கடையை மூட அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதி என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்து தலைமையில் 200-க்கு மேற்பட்டோர் இன்று கவுண்டம்பாளையம் சாராயக் கடைக்கு சென்றனர்.

திடீரென கடையில் இருந்த சாராய பாட்டில்கள், மேசை, நாற்காலிகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் சாராயம் அருந்திக் கொண்டிருந்தவர்களையும், கடை ஊழியர்களையும் தாக்கி விரட்டினர். பின்னர் அங்கிருந்த பொருள்களை கீழே போட்டு உடைத்து விட்டு, கடையின் பெயர்ப்பலகையை கிழித்து எறிந்தனர்.

தொடர்ந்து கடைக்கு பூட்டு போட்டு விட்டு போராட்டக்காரர்கள் ராஜீவ் காந்தி சிலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு சிலையின் முன்புறம் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் நாலாபுறமும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை, திண்டிவனம், கடலூர், வழுதாவூர், காமராஜர் என நான்கு சாலை வழியாக வந்த வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து முடங்கியது.

இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்து போக்குவரத்து போலீஸார் மறியிலில் ஈடுபட்டவர்களை அகற்ற முடியவில்லை. சட்டம் ஒழுங்கு போலீஸார் 20 நிமிடங்கள் கழித்து தான் மறியல் நடந்த பகுதிக்கு வந்தனர். இதனால் நிலைமை மோசமானது. நீண்ட நேரம் கழிந்து வந்த போலீஸார் போராட்டக்காரர்களை அகற்றாமல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கொதிப்படைந்தனர். நீண்டநேரம் காத்திருந்த அவர்கள் ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. ஆனால் போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக நின்றிருந்தனர்.

இதனிடையே வாகன ஓட்டிகள் மறியலை பொருட்படுத்தாமல் செல்ல முயன்றதால், போராட்டக்காரர்கள் அவர்களை தடுக்க முயன்றனர். அவர்களையும் மீறி வாகன ஓட்டிகள் செல்லத் தொடங்கினர். இதையடுத்து அசோக் ஆனந்து எம்எல்ஏ உள்ளிட்ட போராட்டக் குழுவினர் மறியலை கைவிட்டு சாலை மத்தியில் கூடி நின்றனர்.

பின்னர் டிநகர் போலீஸ் எஸ்.பி. ரட்சனா சிங் தலைமையிலான போலீஸார் எம்எல்ஏ அசோக் ஆனந்து உள்பட 50 பேரை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் போக்குவரத்து படிப்படியாக சீரானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய மாதர் சம்மேளனத்தைச் சேர்ந்த பெண்கள் இதே கவுண்டம்பாளையம் கடையை மூடக்கோரி அடித்து நொறுக்கி சூறையாடியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x