Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM

சிங்காரவேலருக்கு நினைவகம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.கவுதமன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருந்ததாவது:

இந்தியாவின் மூத்த தொழிற் சங்கத் தலைவரான சிங்காரவேலர், 1860-ம் ஆண்டு பிறந்தவர். நாட்டிலேயே முதன்முறையாக 1923-ம் ஆண்டு மே தினத்தைக் கொண்டாடியவர். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தை வெற்றி பெறச் செய்வதில் பெரும் பங்காற்றியவர். பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் பலருக்கு ஏராளமான உதவிகளை செய்தவர். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட பல மொழிகளை அறிந்த சிங்காரவேலர் மிகச் சிறந்த வழக்கறிஞர். அந்தக் காலத்திலேயே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட மிகப் பெரிய நூலகத்தை அவர் தனது வீட்டில் வைத்திருந்தார்.

சென்னை மயிலாப்பூர் தெற்கு கடற்கரை சாலையில் வசித்து வந்த சிங்காரவேலரின் குடும்பம், அந்தக் காலத்தில் செல்வச் செழிப்போடு திகழ்ந்தது. அப்போது சென்னைக்கு வந்த ஜவஹர்லால் நேரு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலர் அவரது வீட்டில் தங்கிச் செல்வது வழக்கமாக இருந்தது.

சிங்காரவேலர், ரஷ்ய நாட்டுக்குச் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டை லார்டு வெலிங்டன் என்ற ஆங்கிலேய ஆட்சியாளர் பறிமுதல் செய்து, அங்கு தனது மனைவி பெயரில் லேடி வெலிங்டன் என்ற பள்ளியைத் தொடங்கினார். சென்னை நடுகுப்பம், ராயபுரம், தண்டையார்பேட்டை, மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல இடங்களில் இருந்த வீடுகள், தோட்டம் உள்பட தங்கள் மூதாதையர்களின் 16 விதமான சொத்துகளைக் கொண்டு ‘கந்தப்ப செட்டி - அருணாசல செட்டி குடும்ப அறக்கட்டளை’ என்ற பெயரில் அறக்கட்டளையை சிங்காரவேலர் நிறுவினார். அதன் நிர்வாகிகளாக சிங்காரவேலரும், அவரது சகோதரர் முனுசாமியும் இருந்து பல தொண்டுகளை செய்தனர். அந்தக் காலத்திலேயே பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகள் மூலம் இப்போதும் பொதுமக்களுக்கு பல சேவைகள் செய்யப்படுகின்றன.

எனினும் சிங்காரவேலரின் நினைவுகளைப் போற்றும் வகையில் நினைவகம் அமைக்கப்படவில்லை. அவரது மூதாதையர்களான கந்தப்ப செட்டி மற்றும் அருணாசல செட்டி ஆகியோரின் சமாதிகள் லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளன. ஆகவே, சிந்தனைச் சிற்பி சிங்காரவேலருக்கு அவரது சொந்த இடமான விவேகானந்தர் இல்லம் அருகேயுள்ள வெலிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள காலியிடத்தில் நினைவகம் அமைக்க வேண்டும். அங்கு அவருக்கு ஒரு சிலை நிறுவ வேண்டும். நினைவகத்தில் சிறந்த நூலகம் ஒன்றை அமைக்க வேண்டும். லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்துக்கு சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் கல்வியியல் மேம்பாட்டு வளாகம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கவுதமன் கோரியிருந்தார்.

இந்த மனு மீது தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி எம்.சத்யநாராயணன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது, சிங்கார வேலருக்கு நினைவகம் மற்றும் நூலகம் அமைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நூலகம் அமைப்பது பற்றி அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்காரவேலர் குடும்பத்தினரின் நினைவிடங்களை பராமரித்து, பாதுகாக்க வேண்டும். லேடி வெலிங்டன் கல்லூரி வளாகத்துக்கு சிங்காரவேலர் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x