Last Updated : 03 Jan, 2016 11:33 AM

 

Published : 03 Jan 2016 11:33 AM
Last Updated : 03 Jan 2016 11:33 AM

போக்ஸோ சட்டத்தின்கீழ் குழந்தைகளை துன்புறுத்துவோர் மீதான வழக்குகள் அதிகரிப்பு

குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவோர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.

18 வயதுக்கு உட்பட்ட குழந் தைகள், சிறுவர், சிறுமியருக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்காக மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு ‘பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ (Protection of Children from Sexual Offences Act - 2012) என்ற சட்டத்தைக் கொண்டுவந்தது. இதன்மூலம் சம்பந்தப்பட்ட குற்ற வாளிகளுக்கு ஆயுள் தண்டனை உட்பட பல்வேறு கடுமையான தண்டனைகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. இதற்காக சிறப்பு நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட் டன.

இச்சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, நாடு முழுவதும் குழந்தை களுக்கு எதிரான குற்றச்செயல் களில் ஈடுபடுவோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றன. கடந்த 2013-ம் ஆண் டில் 58,224 பேர் மீதும், 2014-ம் ஆண்டில் 89,423 பேர் மீதும் இச்சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் மூலம் தெரியவருகிறது.

அதேபோல, தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு 655 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2015-ம் ஆண்டு அதைவிட அதிகளவில் பதிவாகியுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். குறிப்பாக திருச்சி, தஞ்சை, நாகை, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 8 மாவட்டங்கள் அடங்கிய மத்திய மண்டலத்தில் 2014-ம் ஆண்டு 128-ஆக இருந்த போக்ஸோ சட்ட வழக்குகளின் எண்ணிக்கை, 2015-ல் 172 ஆக அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக நாகை மாவட்டத்தில் 39 பேர் மீதும், தஞ்சை மாவட்டத்தில் 28 பேர் மீதும், அரியலூர் மாவட்டத்தில் 25 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மாக புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 வழக்குகளும், திருச்சி மாவட் டத்தில் 14 வழக்குகளும் பதிவாகி யுள்ளன.

இதுகுறித்து காவல்துறை அதி காரிகள் கூறும்போது, “போக்ஸோ சட்டத்தை எவ்வாறு பயன்படுத்து வது என காவல் துறையினருக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப் பட்டதே இதற்கு காரணம். சில காவல் நிலையங்களில் இச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் நடக்கிறது. இதுபோன்ற குறை களைச் சரிசெய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றனர்.

மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் இந்திராகாந்தி கூறும்போது, “இச்சட்டத்தை முழுமையாக அமல்படுத்தினால் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முழுமையாகக் குறைத்துவிட முடியும். ஆனால், காவல்துறையினர் இதில் முழு ஈடுபாடு காட்டுவதில்லை. இச்சட்டம் குறித்து காவல் துறையினருக்கு இன்னும் அதிக பயிற்சி அளிக்க வேண்டும். பல இடங்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகாரைப் பெற்றுக் கொண்டு, முறையாக வழக்கு பதிவு செய்வதில்லை. காரணம் கேட்டால், இரு தரப்பும் சமாதானமாகிச் சென்றுவிட்டதாக கூறுகின்றனர். சமாதானம் ஆகக் கூடிய அளவுக்கு இது சாதாரண குற்றமல்ல. எனவே, சம்பவம் நிகழ்ந்தது உண்மை என தெரிய வந்தால், கண்டிப்பாக அதுகுறித்து வழக்கு பதிவு செய்ய காவல்துறை முன்வர வேண்டும். அவ்வாறு செய்தால், போக்ஸோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்” என்றார்.

38 பேருக்கு சிறை தண்டனை

திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இச்சட்டம் அமல்படுத்திய நாளிலிருந்து இன்றுவரை 393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 324 வழக்குகள் மீதான குற்றப்பத்திரிகை சிறப்பு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இதுவரை 38 பேருக்கு சிறை தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. அவர்களில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை, 14 பேருக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x