Published : 05 Jan 2016 06:01 PM
Last Updated : 05 Jan 2016 06:01 PM

தமிழக மீனவர்கள் 20 பேர் கைது: இலங்கையில் தனித்தனி சிறைகளில் அடைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் மீனவர்களள் விடுவிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருந்த மீனவர்களுக்கு,மேலும் 20 பேரை சிறைபிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள் ஒரு விசைப்படகில் இலங்கை கிழக்குப் பகுதியான முல்லைத் தீவு கடற்பகுதியில் திங்கட்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்த போது முல்லை தீவு பகுதி மீனவர்கள் சிறைப்பிடித்து இலங்கை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

செவ்வாய்கிழமை அதிகாலை கச்சத்தீவு பகுதியில் இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரையும், நெடுந்தீவு கடற்பகுதியில் ஒரு விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து விசாரணைக்கு பின்னர் மன்னார் மற்றும் யாழ்பாணம் மாவட்ட மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

யாழ்ப்பாணம், வவுனியா, திரிகோணமலை சிறைச்சாலைகளில் அடைப்பு

முல்லைத் தீவு கடற்பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேரையும் காவல்துறையினரின் விசாரணைக்கு பின்னர் திரிகோணமலை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த 8 மீனவர்களும் ஜனவரி 11 வரையில் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜனவரி 19 வரையிலும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜனவரி 19 வரையிலும் வவுனியா சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

(மன்னார் நீதிமன்றத்தில் ராமேசுவரம் மீனவர்கள் 8 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர்.)

கடந்த 2015 ஆண்டில் இலங்கை கடற்படையினர் 27 முறை வெவ்வேறு சிறைபிடிப்புகள் மூலம் 71 விசைப்படகுகளைக் கைப்பற்றி தமிழகம் மற்றும் புதுவை மீனவர்கள் 466 பேர்களை கைது செய்தனர். மீனவர்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பின்னர் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளால் அவ்வப்போது கைது செய்யப்பட்ட மீனவர்கள் சிறைவாசத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் மீனவர்களின் படகுகள் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை.

தற்போது யாழ்ப்பாணம், வவுனியா, அனுராதபுரம் மற்றும் திரிகோணமலை ஆகிய இலங்கைச் சிறைகளில் மொத்தம் 124 தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x