Published : 01 Sep 2016 09:01 AM
Last Updated : 01 Sep 2016 09:01 AM
குமரிக் கரையையொட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் இன்று (வியாழக்கிழமை) வடதமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறும்போது, “தென் தமிழகம் மற்றும் குமரிக் கரையையொட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அனேக இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்திருக்கிறது. அடுத்து வரும் 24 மணி நேரத்தில் வடதமிழகத்தில் அனேக இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்” என்றார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக மன்னார்குடியில் 120 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. உத்திரமேரூர், வாணியம்பாடியில் தலா 110 மி.மீ., காஞ்சிபுரத்தில் 100 மி.மீ., மகாபலிபுரம், ஆரணி, மதுராந்தகம் ஆகிய இடங்களில் தலா 90 மி.மீ., ஆலங்காயம், ஜெயங்கொண்டம் தலா 80 மி.மீ., கேளம்பாக்கம், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, செய்யாறு ஆகிய இடங்களில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
அறந்தாங்கி, வல்லம், திருமயம், சங்கராபுரம் ஆகிய இடங்களில் தலா 60 மி.மீ., வந்தவாசி, போளூர், செங்கம், மேலூர், கீரனூர், சின்னக்கல்லாறு, தளி, திருவாலங்காடு ஆகிய இடங்களில் தலா 50 மி.மீ., வலங்கைமான், செங்கல்பட்டு, மேல் ஆலத்தூர், திருப்புத்தூர், தாம்பரம், மேட்டூர், பட்டுக்கோட்டை, கரூர், ஆம்பூர் ஆகிய பகுதிகளில் 40 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது.
மேலும், திருவண்ணாமலை, வால்பாறை, பெரும்புதூர் உட்பட 22 இடங்களில் தலா 30 மி.மீ., விருதுநகர், வானூர், மதுக்கூர், அவினாசி உட்பட 28 இடங்களில் 20 மி.மீ., கேத்தி, திருவையாறு, அரிமளம், மணமேல்குடி உட்பட 28 இடங்களில் தலா 10 மி.மீ. மழை பதிவாகி யுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT