Published : 27 Oct 2014 09:53 AM
Last Updated : 27 Oct 2014 09:53 AM

‘வைட்டமின் ஏ’ மருந்து வழங்கும் திட்டம்: பல குழந்தைகளை சென்றடையவில்லை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடும்பநலத்துறை சார்பாக வைட்டமின் ஏ மருந்து வழங்கும் திட்டம் பல குழந்தைகளை சென்றடையாமல் உள்ளது. இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

இந்தியாவில் 20 சதவீத குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படு வதாக தேசிய ஊட்டச்சத்து நிறுவன ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் வைட்டமின் ஏ குறைபாட்டால் 5 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால் பார்வை இழப்பு, உடல் வளர்ச்சியில் பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படு கின்றன.

16 கோடி குழந்தைகள்

இதை தடுக்கும் விதமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுக்கு 2 முறை குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மருந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு 16 கோடி குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக ஒரு குழந்தைக்கு தலா ரூ.68 செலவிடப்படுகிறது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 5 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் 5 லட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் கடந்த 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வைட்டமின் ஏ மருந்து வழங்கப்பட்டது.

செவிலியர்கள் அலட்சியம்

மாநகராட்சி சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர் ஆகியோர் இணைந்து, வீடு வீடாகச் சென்று இம்மருந்தை வழங்க, மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால் பல அங்கன்வாடிகளுக்கு இது குறித்த தகவலே தெரியவில்லை. கொடுங்கையூர் போன்ற பகுதிகளில் பல குழந்தைகளுக்கு 15-ம் தேதி நிலவரப்படி வைட்டமின் ஏ மருந்து வழங்கப்படவில்லை. பல வீடுகளுக்கு செவிலியர்கள் செல்லவில்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சுகாதார செவிலியர்களிடம் கேட்டபோது, தாங்கள் செல்லும்போது, வீட்டில் யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்று பதிலளித்தனர்.

இத்திட்டம் குறித்து எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படாததால், அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் பெற்றோருக்கு இதுபற்றி எதுவும் தெரியவில்லை. இதனால் அரசு செவிலியர்களை அவர்கள் குடியிருப்புக்குள் அனுமதிக்கவே இல்லை.

அரசு மட்டுமே வழங்குகிறது

பெரியவர்களுக்கான வைட்டமின் மாத்திரைகள் பல கடைகளில் கிடைக்கின்றன. ஆனால் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான மருந்தை அரசு மட்டுமே வழங்குகிறது. இதை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வசதி படைத்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அது குறித்து மாநகராட்சி குடும்ப நலத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று மருத்துவ அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி குடும்ப நலத்துறை அலுவலர் ஹேமலதாவிடம் கேட்டபோது, மாநகராட்சி ஆணையரின் ஒப்புதல் பெற்று, இனி வரும் காலங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு, வைட்டமின் ஏ மருந்து வழங்கும் பணி தொடங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x